

உங்களை யாரும் மதிப்புக்குறைவாக நடத்தக்கூடாதபடியும், சுயமரியாதையோடு நடத்தும்படி இருக்க இந்த வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் நெருங்கிய உறவான மகனோ அல்லது மகளோ உங்களிடமிருந்து பெரிய தொகையை எதிர்பார்த்தால், நன்றாக யோசித்து உங்களுக்கும் உங்கள் உறவுக்கும் ஏற்ற சுமுகமான முடிவை எடுங்கள். எந்த முடிவு எடுப்பதற்கு முன் நன்கு யோசித்து முடிவு எடுக்கவும்.
உங்களால் செய்யமுடியாத வேலைகளை பற்றி மிக நீண்ட விளக்கமாகக் கூற வேண்டாம். நீங்கள் தெளிவாக உங்களால் செய்ய முடியாத வேலையை மறுத்து விட்டால் அதைப் பற்றிய அனாவசிய விவாதத்தைத் தடுக்கமுடியும்.
நீங்கள் எப்போதும் எல்லோருக்கும் எந்த நேரத்திலும் உதவக்கூடியவராக இருக்கத் தேவையில்லை. உங்கள் உறவினர்களில் சிலர் அவர்களின் பிரச்னைகளுக்காக உங்கள் உதவியை நாடி வந்தால் அனைத்தையும் இழுத்துபோட்டுக் கொண்டு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் எப்போது உதவும் நிலையில் இருப்பீர்கள்.
எப்போது உதவ முடியாத நிலையில் இருப்பீர்கள் என்பதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தி விடுங்கள். உங்களுக்கென்று ஒதுக்கப்படும் நேரத்தை இழக்காதீர்கள்.
நீங்கள் பல விஷயங்களில் தேர்ந்தவராக இருக்கலாம். உங்களுக்கு ஐடியில் நல்ல விஷயஞானம் இருக்கலாம். அல்லது சிறந்த அக்கௌண்டண்டாக இருக்கலாம். இதனால் எல்லோரும் உங்கள் உதவியை அடிக்கடி நாடக் கூடும். இதனால் எல்லோரும் காசு செலவில்லாமலேயே உங்கள் உதவி மூலம் அவர்கள் வேலையை முடித்துக் கொள்ள பார்ப்பார்கள். ஆனால் அதற்கு பதிலாக உங்களது தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்யும் அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்களின் பிரச்னைகளை மிக அக்கறையாக காது கொடுத்துக் கேட்டு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது போன்றவை ஒரு அளவில் தான் இருக்க வேண்டும். சிலர் கேட்பதற்கு ஆள் இருக்கிறாரே என்று ஓயாமல் அவர்கள் பிரச்னைகளைக் குறித்தே பேசுவார்கள். எப்போதும் அடுத்தவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அதிக அக்கறை காட்டாதீர்கள். சில பிரச்னைகளை அவர்களே தான் தீர்க்க வேண்டும்.
அடுத்தவர்களின் முடிவிற்கான யோசனைகளை அள்ளி விடுவதில் கவனமாக இருங்கள். பெரும்பாலும் நீங்க முடிவை ஆலோசனையாக கூற வேண்டாம். சிலசமயங்களில் உங்களை அதிக அளவு ஈடுபடவைத்து உங்களுடைய வேலைகளையே மறக்கச் செய்யும் அளவிற்கு அவர்கள் நடந்து கொள்வார்கள்.
நம் வருமானம் நம்முடைய ஆரோக்கியம் குறித்த விஷயங்கள் மற்றும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் என்று இப்படி அனைத்திலும் மற்றவர்கள் அறிந்து கொள்வதில் துடிப்பாக இருப்பார்கள். ஆனால் எல்லா விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக எல்லோரிடமும் கூற வேண்டாம். நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு சிலரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான எல்லையை அமைப்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும். திறந்த புத்தகம் போல் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறுவது சரியல்ல. சிலவற்றை நாம் ரகசியமாக வைப்பதே நமக்கு நல்ல விஷயமாக இருக்கும்.
அடுத்தவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் எத்தனைமுறை ஜிம் செல்வது தடைபட்டிருக்கலாம். உங்களுக்கான நேரத்தை பலதடவைகள் இழந்திருக்கலாம். உங்கள் ஆர்வத்தில் உங்கள் சொந்த விஷயங்களை கூட தவிர்த்து விட்டு அடுத்தவர்களின் வேலையைப் பார்க்கிறீர்களா? உங்கள் பொழுதுபோக்கான புத்தகம் படிப்பது, நடைபயிற்சி இப்படி எத்தனையோ நீங்கள் அடுத்தவர் தேவையை பூர்த்தி செய்ய உங்களின் பொழுதுபோக்கும் பாதிக்கப்படும் அளவிற்கு ஈடுபட வேண்டிய அவசியமில்லை.
உங்கள் வேலைகள் மற்றும் பொழுதுபோக்குகளில் நீங்கள் அக்கறை காட்டினால் தான் மற்றவர்கள் உங்களை மதித்து உங்களை அடிக்கடி தொந்தரவு செய்ய மாட்டார்கள்.