பெண்கள் பலர் மகிழ்ச்சியுடன் விளங்கினாலும் (ஆண்களை விட) பலர் எளிதில் மனச்சோர் வடைகிறார்களே ஏன்? ஆசியர்களைவிட லத்தீன் அமெரிக்காவில் அதிக மகிழ்ச்சியோடு விளங்கு கிறார்களே அது ஏன்? அதற்கு சமூக உறவுகளே முக்கியக் காரணம்.
ஒருவரது கலாசாரம் அவரது சமூக உறவுகளை வளர்க்கும் போது அவர்கள் மகிழ்ச்சியோடு விளங்குகிறார்கள். மற்றொரு விதமாக கூறினால் மகிழ்ச்சியாகக் காணப்படுபவர்கள் மேம்பட்ட சமூக உறவுகளைப் பேணுகிறார்கள். இவை எல்லாம் உளவியல் மற்றும் சமூகவியல் நிபுணர்களின் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
நல்ல குடும்ப வாழ்க்கை, சிறப்பான சமூக வாழ்க்கை, ஆர்வமுள்ள பணி, பயனுற்ற பொழுதுபோக்கு, சிறப்பான இலக்குகளை நோக்கி நகர்தல் ஆகியவை நிலையான முழுமையான மகிழ்ச்சியை ஈட்டித் தரவல்லன என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.
இளைஞர்களாக வெளிப்புற ஈடுபாடுகளில் இன்பம் துய்த்தவர்கள் வயதாகும்போது நிலையான மகிழ்ச்சிதரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். முதியவர்களுக்கு முதுமை காரணமாக நோய்கள், வலிகள், மகிழ்ச்சி பாதித்தாலும், அவர்களது மனமுதிர்ச்சியானது நிலையான மகிழ்ச்சியை ஈட்டித் தர வல்லது.
நகைச்சுவை உணர்வு மகிழ்ச்சியை ஈட்டி தருகிறது. தன்னையும் தன் செயல்களையும் பார்த்து , அதில் லயித்து, பிறருடன் சேர்ந்து சிரித்த உரையாடல் ஆகியவை மகிழ்ச்சிக்கு வித்திடுகின்றன.
அம்மா - மகள் உறவு:
மகளுக்கு என்ன பிடிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் மகளுக்குப் பிடிக்கிற இசையை நீங்களும் ரசியுங்கள். உங்களுக்குப் பழக்கம் இல்லாத சில செயல்களை மகளுக்காகச் செய்யுங்கள். உதாரணமாக ஷாப்பிங் மாலுக்கு அவளுடன் சென்று சுற்றிப் பார்ப்பது, ஃபுட் கோர்ட்டில் வித்தியாசமான உணவகங்களில் இதுவரை ருசித்திராத உணவுகளை டேஸ்ட் பார்ப்பது… இப்படி!
இதேபோல மகளின் உலகத்தில் மெல்ல மெல்ல இணையுங்கள். இதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அவர்களுக்கு அதிகரிக்கும். ஆனால், எதையும் ஓவராக செய்துவிட வேண்டாம். அது அவளுக்கு எரிச்சலை தராமல் பார்த்துக்கொள்வது அவசியம். தன் அம்மா பழைய மனுஷியாக இருப்பதை டீன் ஏஜ் மகள்கள் விரும்புவதில்லை. அதே நேரம் மகளுக்கு இணையாக தன்னையும் டீன் ஏஜ் பெண் போல காட்டிக்கொள்ள நினைக்கும் அம்மாக்களையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். தலைமுறை இடைவெளி எல்லைகளைக் கடந்து அம்மா - மகள் உறவு வலுப்பெறுவதன் முதலடியை இங்கே எடுத்து வையுங்கள். இது மகிழ்ச்சியின் எல்லைக்கே கூட்டிச் செல்லும். புதிய அனுபவமாகவும் மலரும்.
திட்டமிடுங்கள்:
கணவர் தொழிலதிபர். தொழில் வணிகம் என்றாலே மாதாமாதம் ஒரே மாதிரி வருமானம் இருக்காது. காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்றார்போல் வருமானம் மாறுபடும். அதனால் அதுபோன்ற ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப செலவுகளையும் சேமிப்பையும் திட்டமிடுவது அவசியம். அதற்கு குழந்தைகளையும் கூட வைத்துக் கொண்டே வீட்டு பட்ஜெட் போடுவதை சொல்லிக் கொடுங்கள். அப்பொழுதுதான் அவர்களும் வருமானத்துக்கு மீறி செலவு செய்யாமல் சிக்கனமாக வாழ்வதை கற்றுக்கொள்வார்கள். இதனால் மாத கடைசியில் பட்ஜெட்டில் துண்டு விழுந்து, ஒருவருக்கு ஒருவர் கடிந்துகொண்டு மகிழ்ச்சி குறைவதைத் தடுத்து, எப்பொழுதும் நிதானம் ஆன மகிழ்ச்சியிலேயே இருக்கலாம்.
உதவுங்கள்; ரசியுங்கள்:
அதிக பணம் சம்பாதிப்பவர்கள்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அன்பும், கருணையுமாக அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களே அதைவிட அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள் , ஓய்வு நேரங்களில் வேலை செய்யுங்கள், சாலையில் எதிரில் வரும் அறிமுகம் இல்லாத மனிதருக்கு வணக்கம் சொல்லுங்கள். தெருவில் இருக்கும் துப்புரவு தொழிலாளியை நன்றாக வேலை செய்தீர்கள் என்று பாராட்டி மகிழலாம். மரத்திலிருந்து பறக்கும் பெயர் தெரியாத பறவையின் அழகை வியந்து ரசிக்கலாம். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் காரணங்கள் தானாக வந்துசேரும்.
படியுங்கள்; பயிலுங்கள்:
சும்மா இருக்காமல் எப்போதும் செய்வதற்கு ஏதும் வேலையை வைத்திருக்கவேண்டும். சும்மா இருக்கும்போது விபரீதமாக எதையாவது செய்யத் தோன்றும். மன அழுத்தம், சோம்பேறித்தனம் என வந்துவிடும். அதுபோன்ற தருணங்களில் தையல், எம்பிராய்டரி, இசை, விளையாட்டு என ஆர்வமுள்ள ஒன்றில் முறையான பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். பயிற்சி எடுக்க வரும் மற்றவர்களுடன் நட்புகொள்ளுங்கள். ஒரே விஷயத்தில் ஆர்வம் உள்ள மனிதர்கள் கூடி பேசுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சமையலில் ஒரு புதுரெசிபி, நெட் பேங்கிங் செய்வதில் ஒரு சந்தேகம் என உங்களால் முழுமையாக செய்துமுடிக்க முடியாத விஷயங்களில் அடுத்தவர்களின் உதவியைக் கேளுங்கள். இப்படி உதவிகள் பெற்று ஒரு விஷயத்தை செய்யும்போது உற்சாகம் அதிகரிக்கிறது. சமூகத்தில் கலந்து பழகும் இயல்பும் பிறக்கிறது. சொல்லிக் கொடுப்பவர்கள் நம்மாலும் உதவ முடிகிறதே என்று மகிழ்ச்சி அடைவார்கள்.
நம்பிக்கை வையுங்கள்:
நாம் இந்தப் பூமிக்கு சுற்றுலா வந்திருக்கிறோம். நம் பயணம் பாதை என எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டிருக்கின்றன. நமக்கான எல்லாமே அந்தந்தக் காலத்தில் கிடைக்கும் என நம்புங்கள். வாழ்க்கைப் பயணத்தில் அனைத்தையும் ரசித்துச் செய்யுங்கள். பெண்கள் வீட்டின் தூண்கள். அவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான் வீட்டையும் சுற்றுச்சூழலையும், மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.
தான் மட்டும் மகிழ்வது மகிழ்ச்சி அல்ல; பிறரையும் மகிழ்வித்து மகிழ்வதே மகிழ்ச்சி!