-நித்தீஷ்குமார் யாழி
தோல்வி என்பது அவமானமாக பலர் இன்று எண்ணு கின்றனர். இவ்வுலகில் தோற்காமல் ஜெயித்தவர்கள் யாரும் இல்லை. பிறந்த குழந்தை ஒரே நாளில் நடப்பதில்லை. நடப்பதற்கு முன்னால் பலமுறை தடுமாறி கீழே விழும். அது தோல்வி அல்ல. நடப்பதற்கான முயற்சியே ஆகும்.
வெற்றி என்பதும் தோல்வி என்பதும் பார்வையில்தான் இருக்கிறது. புரிதல் இல்லாமல் தோல்வியைப் பற்றி பேசுபவர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். அவர்களுக்கு தோல்வி என்றால் என்னவென்று தெரியாது. கஜினி முகம்மது 16 முறை தோற்று 17வது முறையாக வென்றான் என்பதனை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
உலகம் உங்களை எப்படிப் பார்க்கிறது என்பது இருக்கட்டும். நீங்கள் முதலில் உங்களை ஒரு ஹீரோவாகப் பாருங்கள். வெற்றி தோல்வி பற்றி நாம் எப்போதும் கவலைப்படக் கூடாது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் நாம் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் செய்கிற வேலை, எதிர்பார்த்த அளவுக்குப் பலன் தரவில்லை என்றால், நீங்கள் அதைச் சரியாக செய்யவில்லை என்று நினைத்து அதற்கான மாற்றுவழியைக் கண்டுபிடியுங்கள்.
தனக்கு அறிமுகம் இல்லாத, அனுபவம் இல்லாத விஷயம் பற்றி மற்றொருவர் விமர்சனம் செய்வது சகஜம்தான். ஒரு செயலில் வென்றால் அதற்கு உங்கள் அசாத்தியத் துணிச்சல்தான் காரணம் என்று கூறுவார்கள். தோல்வி அடைந்தால் இவனுக்கு எதற்கு இந்த வேலை என்பார்கள்.
சிறந்த பேச்சாளர், இளைஞர்களின் ஊக்குவிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று பன்முகம்கொண்ட பிரபலம் கோபிநாத் அவர்கள் உளவியலைப் பற்றிக் குறிப்பிடும்போது, “நமக்கு பிரச்னைகள் ஏற்படும்போது அவசரம் அவசரமாக முடிவெடுக்கிறோமே தவிர, யாரும் யோசிப்பதில்லை. யோசிப்பதன் மூலம் மங்கலாய் தெரிகிற ஒரு விஷயம், மிகவும் தெளிவாக புரிய ஆரம்பமாகிறது. பிரச்னை என்றாலும் சரி தோல்வி என்றாலும் சரி முதலில் அதற்கான காரணம் என்ன? என்று தெரிந்து அதை சரிசெய்வதற்கான திட்டத்துடன் செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே” என்கிறார்.