

How to end day perfectly:
ஒரு நாளை மிக சிறப்பாக முடிக்க திட்டமிடுவது என்பது மிகவும் அவசியம். முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்துவதும், நேரத்தை வீணடிக்கும் செயல்களை தவிர்க்கவும், தியானம் அல்லது நன்றியுணர்வு பயிற்சி செய்து அடுத்த நாளுக்கு தயாராகலாம். தொழில்நுட்பத்தில் இருந்து சற்று விலகி மனதை மெதுவாக்க உதவும் ஒரு நல்ல புத்தகத்தை படிக்கலாம். இது நமக்கு அமைதியான தூக்கத்தையும், அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கவும் உதவும்.
ஒரு நாளை வெற்றிகரமாக நிறைவுடன் முடிப்பதற்கான படிகள் சில:
மனதையும் உடலையும் தளர்த்துதல்:
படுக்கைக்கு செல்வதற்கு 1 மணி நேரம் முன்பாவது தொலைபேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் டிவியை தவிர்த்து விடுவது நல்லது. மனதை மெதுவாக்க உதவும், அமைதியான மனநிலையை தரக்கூடிய, விருப்பமான ஒரு புத்தகத்தை தேர்வு செய்து படிக்கலாம்.
மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கக்கூடிய இசையை கேட்கலாம். அத்துடன் மன அழுத்தத்தை குறைக்க உதவும் தியான பயிற்சியில் ஈடுபடலாம். தியானம் செய்வது, நன்றியுணர்வு பயிற்சி செய்வது அல்லது பிடித்த இசையை கேட்பது உடல் மற்றும் மனதை தளர்வாக வைத்திருக்க உதவும்.
உடல் பதற்றத்தை விடுவிக்க யோகா செய்வது அல்லது குறுகிய, மெதுவான நடைப்பயிற்சி மேற்கொள்வது பயன் தரும். உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் ஒரு குளியல் போடுவதும் சிறப்பாக இருக்கும்.
திட்டமிடல் மற்றும் மறுபரிசீலனை:
இன்றைய நாளில் முடித்த வேலைகளை பட்டியலிட்டு அடுத்த நாளுக்கு தேவையான முக்கிய வேலைகளை சுருக்கமாக திட்டமிடலாம். நம் மனதை கவலைகளிலிருந்து விடுவிக்க அடுத்த நாளுக்கான நம் முதல் மூன்று பணிகளை சுருக்கமாக குறித்து வைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கச் செல்லலாம்.
இரவு உணவை சீக்கிரமாக முடித்துக் கொண்டு, சாப்பிட்டவுடன் படுக்கைக்கு செல்லாமல் ஒரு மணி நேரம் நமக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட்டு நிறைவான உணர்வுடன் உறங்கச் செல்லலாம்.
குடும்பத்தினருடனோ அல்லது அன்புக்குரியவர்களுடனோ நேரத்தை செலவிடுவதன் மூலம் ஆரோக்கியமான மனநிலையைப் பெறலாம்.
அடுத்த நாளுக்கு தயாராகுதல்:
காலை மற்றும் பகல் பொழுதை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் தொடங்கி சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும், போதுமான அளவு தண்ணீர் பருகுவதும் என நம் உடலையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொண்டு, மாலை மற்றும் இரவு பொழுதில் மனம் அமைதியுடன், நிறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் தூங்கச் செல்லும் பொழுது மனதிற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
அன்றைய நாளில் நடந்த நல்ல விஷயங்களைப் பற்றி சிந்திப்பதும், நன்றி சொல்ல வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு நன்றியுணர்வு தெரிவிப்பதும், நம் மனதில் நேர்மறை உணர்வை அதிகரிக்கும்.
அடுத்த நாள் அணிய வேண்டிய உடைகள், எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் போன்றவற்றை தயார் செய்து வைக்கலாம். அத்துடன் படுக்கையறையை சுத்தமாக வைத்து தூங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொள்ளலாம்.
வேலை அல்லது கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உடலையும் மனதையும் தளர்த்தும் செயல்களில் ஈடுபட்டு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு அடுத்த நாள் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை திட்டமிடுவது அடுத்த நாள் காலையில் பதட்டத்தைைக் குறைத்து உற்சாகமாக வேலைகளில் களமிறங்க உதவும். இப்படி செய்வது ஒவ்வொரு நாளையும் திருப்தியாகவும் அழகாகவும் முடிக்க முடியும். இப்படி ஒரு நிறைவான உணர்வுடன், ஒரு நாளை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் அடுத்த நாளை எதிர் நோக்கி நிம்மதியாக உறங்கச் செல்லலாம்.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!