இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு விதத்தில் மன அழுத்தம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சரி என்னதான் செய்வது இதோ சில யோசனைகள்.
மனதுக்கு மாற்று வழி
மன அழுத்தமாக உணரும் தருணங்களில் மனசுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வது, மனதை உற்சாகமாக்கும் என்பது உளவியல் பாடம். எனவே எப்போதும் கொஞ்சம் உற்சாகமான விஷயங்களை கை வசம் வைத்திருங்கள்.
அது ஒரு சின்ன பிரேக் எடுத்து ஒரு கதை படிப்பதாகவும் இருக்கலாம், டைரி எழுதுவதாகவும் இருக்கலாம், அல்லது இணையத்தில் உலவுவதாகவும் இருக்கலாம். உங்களுக்கு ஏற்ற, பிடித்த ஒரு ரிலாக்சேஷன் கைவசம் இருக்கட்டும்.
ஒன்றுமே இல்லையேல் கண்களை மூடி, உங்களுக்குப் பிடித்த ஒரு இனிமையான சூழலை கற்பனை செய்து கொஞ்ச நேரம் பகல் கனவு காணுங்கள். தப்பில்லை!
உற்சாகமான உடல் அவசியம்
மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டுமெனில் உடல் உற்சாகமாய் இருக்க வேண்டும் என்கிறது மருத்துவம்! அதனால்தான் மன அழுத்தம் தவிர்க்க உடற்பயிற்சியை வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் மனம் உற்சாகமாக இருக்கும். அதற்கு உடற்பயிற்சி கை கொடுக்கும். மூளையிலும், உடலிலும் ஆக்சிஜன் குறைவில்லாமல் இருந்தால் மூளை உற்சாகமாய் இருக்கும். அதற்கு மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம் போன்றவை கை கொடுக்கும்! உடலைப் பேணுவதன் மூலமாக மன அழுத்தத்தை விரட்டும் வழி இது!
மன அழுத்தமும், மருத்துவமும்
நமக்கு மன அழுத்தம் வரும்போது உடல் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை வெளிவிடுகிறது! இந்த ஹார்மோன்கள் உடலை உலுக்கி எடுக்கின்றன. குருதி அழுத்தத்தை எகிற வைக்கின்றன! இதயத் துடிப்பை தாறுமாறாய் ஏற்றுகின்றன! குருதியில் சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன!
இது அப்படியே படிப்படியாய் தேங்கி, இதய நோய்கள், உடல் பருமன், மன நோய்கள், உடல் வலிகள் என பல்வேறு நோய்களை இழுத்து வரும். இவ்வளவு ஏன்? பெண்களுக்கு மாதவிலக்கு தாறுமாறாகிப் போகவும் முக்கிய காரணம் மன அழுத்தம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதிர்ச்சி மன அழுத்தங்கள்
ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வைப் பார்ப்பதால் வரும் மன அழுத்தத்தை “போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர் – PSTD என்கின்றனர். ரொம்ப மனசுக்குப் பிடித்தமானவர்கள் சட்டென இறந்து போனாலோ, ஒரு விபத்தையோ, வன்முறையையோ நேரில் பார்த்தாலோ, பாலியல் ரீதியான வன்முறையைச் சந்தித்தாலோ, அல்லது இப்படிப்பட்ட ஏதோ ஒரு கடினமான சூழல் காரணமாக உருவாகும் மன அழுத்தம் இது!
ஒருவகையில் துரதிர்ஷ்டவசமான சூழல் இது எனினும், இதிலிருந்து வெளி வரவேண்டியது அவசியம். நல்ல ஆரோக்கியமான நட்புகளை வளர்த்துக் கொள்வதும், பொழுதுபோக்குகளை அரவணைப்பதும், உடற்பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கையை வலுவாக்குவதுமே வெளிவரும் வழிகள்.
விட்டு விடுதலே பெற்றுக் கொள்தல்
“கல்யாண வீடாயிருந்தா நான்தான் மாப்பிளையா இருக்கணும், சாவு வீடா இருந்தா நான் தான் பொணமா இருக்கணும். எந்த இடமா இருந்தாலும் மாலையும் மரியாதையும் எனக்குத் தான் கிடைக்கணும்” எனும் மனநிலை நிம்மதியின் எதிரி.
விட்டுக் கொடுத்தலும், இயல்பாய் வாழ்தலுமே மன அழுத்தத்தை விரட்டும் வழிகள். உங்களை மன அழுத்தத்துக்குள் தள்ளும் விஷயங்கள் என்னென்ன என பட்டியலிடுங்கள். சின்னச் சின்ன விஷயங்களை சரி செய்யுங்கள். தள்ளி விட முடிந்தவற்றை தள்ளி விடுங்கள்.
அதிக நேரம் மொபைல் ஃபோனை கையில் வைத்திருந்தாலே கண்டிப்பாக மன அழுத்தம் வரும். சோசியல் மீடியாக்களில் நமக்கு பிடித்ததும் வரும் பிடிக்காததும் வரும். பிடித்தது வரும்போது மனம் மகிழும் பிடிக்காதது வரும் பொழுது நம் மனநிலை மாறி மன அழுத்தத்தை உருவாக்கும். முடிந்தவரை இரவு தூங்கும் முன் ஒரு மணி நேரத்திற்கு முன்பிலிருந்து மொபைல் போனை தொடாதீர்கள் ஒரு வாரம் செய்து பாருங்களேன். மேற்கண்டவியை நீங்கள் பின்பற்றி பாருங்கள் மனசு லேசாகும் மன அழுத்தமே இருக்காது உற்சாகம் பிறக்கும்.