பெரிய விஷயங்களைக் கூட சுலபமாகச் செய்து வெற்றி காண்பது எப்படி?
தனது அன்றாட பணிகளைத் தாண்டி ஒரு பெரிய விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் ஒரு மனிதனுக்கு தயக்கமும் பயமும் ஏற்படும். சொந்தமாக வீடு கட்டுவது, புதிய தொழில் ஒன்றை தொடங்குவது, பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்று பட்ஜெட்டும் உழைப்பும் கூடுதலாக உள்ள செயல்களை கூட எளிதாக செய்து முடிக்கலாம். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. முதலில் இவ்வளவு பெரிய விஷயமா என்று தான் செய்யப்போகும் செயலைக் குறித்து ஏற்படும் மலைப்பையும் திகைப்பையும் அகற்ற வேண்டும். இது ஒரு பெரிய செயல்தான். ஆனால், தன்னால் இதை முடிக்க முடியும் என்கிற அடிப்படை நம்பிக்கை அவசியம்.
2. தான் செய்யப்போகும் செயலின் திட்டத்தை தெளிவாக தீட்டிக்கொள்ள வேண்டும். அனுபவம் வாய்ந்த உறவினர், நண்பர்கள் போன்றோரின் உதவியை நாடலாம். அவர்களின் ஆலோசனையை கேட்கலாம். திட்டத்தை மறு சீரமைப்பு செய்து கொள்ளலாம்.
3. கடந்த காலத்தில் இதேபோன்ற ஒரு முயற்சியில் இறங்கி தோல்வி அடைந்திருந்தால், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எதனால் அந்த திட்டம் தோல்வியடைந்தது என்பதை தீர ஆராய்ந்து பார்த்தால் அதற்கான காரணங்கள் விளங்கும். அவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏற்படப்போகும் தவறுகளை நீக்கக்கூடிய நுண்ணறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
4. தான் செய்யப்போகும் செயலில் தடைகளும் தடங்கல்களும் வரலாம் என்பதை எதிர்பார்க்கும் மனோ நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றை எப்படி சமாளிக்க முடியும் என்கிற நுணுக்கத்தை கற்றுக்கொள்ள முடியும். அந்தத் திட்டம் தோல்வியடைந்தால் அதற்கு மாற்றான பிளான் பி என்ற சொல்லப்படும் வேறு திட்டம் கைவசம் தயாராக இருக்க வேண்டும்.
5. வலுவான திட்டக் குழுக்களை உருவாக்க வேண்டும். உங்கள் முயற்சியில் தோள் கொடுக்கும் சரியான குழு உங்களிடம் இருக்க வேண்டும். தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய ஆலோசனையை கேட்டறிந்து அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து முயற்சியில் இறங்க வேண்டும்.
6. பிறருடைய அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் இதுபோன்ற ஒரு பெரிய செயலை எப்படி செய்தார்கள் என்று கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று விரும்பினால் சொந்த வீடு கட்டிய நண்பர்களின் ஆலோசனையை கேட்டுப் பெறலாம். அதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராயலாம். கட்டுமான பொருட்களை எங்கே வாங்கினால் தரமாகவும் விலை குறைவாகவும் இருக்கும் என்று அவர்களை கேட்டு அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
7. தான் எடுத்துக்கொண்ட வேலையை சிறு சிறு இலக்குகளாகப் பிரித்துக் கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொரு சிறு இலக்குகளையும் வெற்றிகரமாக முடிக்கும் போதும் தன்னம்பிக்கையின் அளவு உயர்வதோடு அடுத்ததை செய்வதற்கான ஆற்றலும் கிடைக்கும்.
எந்த ஒரு பெரிய செயலும் சிறிய அடியில்தான் தொடங்குகிறது என்ற உண்மையை புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி உங்களுக்குத்தான்.