பெரும்பாலும் நமது வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும், நமக்கான ஏதோ ஒன்றை பெற்றுத் தரும். இதற்கு முழு முதற்காரணமாக இருப்பது, நமது எண்ணங்களே என்று நாம் தப்புக்கணக்கு போட்டுக் கொள்கிறோம்.
ஆனால் ஒரு விஷயத்தை நன்கு கூர்ந்து கவனித்தால் நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் முரண்பாடு இருப்பதை நாம் அறிய முடியும். நாம் அனைவருமே பல நல்ல சிந்தனைகளை நம்முள் ஊக்குவித்துக் கொள்கிறோம். ஆனால் அதற்கேற்றவாறு நம்முடைய செயல்பாடுகள் இருக்கின்றதா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்பதே நிதர்சனம்.
நன்கு படித்தால் எதிர்காலத்தில் சிறப்பான இடத்தை அடையலாம் என்பது எனக்கு தெரியும் ஆனால் அதை நான் செய்வது கிடையாது.
கடின உழைப்பு நிச்சயம் நமக்கு வெற்றியை அளிக்கும் என்பது தெரியும், ஆனால் அந்த உழைப்பை நாம் சரிவர போடுவது கிடையாது.
அனைவருக்குமே வாழ்வில் அப்படி ஆகவேண்டும், இப்படி ஆகவேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கான செயல்பாடுகள் சரியாக இருப்பதில்லை.
இதுபோன்று நம்முடைய எண்ணங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் மிகப் பெரிய முரண்பாடு இருக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நான் செய்ய நினைக்கும் அனைத்தையும் நான் செய்வதில்லை. ஆனால் நான் செய்யும் ஏதோ ஒன்றின் மூலம் ஏற்படும் விளைவானது என்னுடைய எண்ணங்களுக்கு வித்தாக அமைகிறது.
இதை மையமாக வைத்து மனிதர்களை இருவகையாக பிரித்தால்,
ஒருவன் தான் செய்ய நினைக்கும் ஒன்றை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு, அது எடுபடாமல் போவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும், செய்வதற்கு முன்னதாகவே நினைத்து, அச்செயலை செய்யாமல் போகிறான்.
இன்னொருவன் தான் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாகவே, அச்செயலின் மூலம் தான் சாதித்ததை போன்று கற்பனை செய்து கொண்டு, கற்பனைக் கடலில் மிதக்கிறான்.
இவர்கள் இருவரிடமும் இருக்கும் ஒற்றுமை என்னவென்று பார்த்தால், இருவருமே ஏதோ ஒரு காரணங்களை மேற்கோள்காட்டி செயல்களைச் செய்வதில்லை. எனவே, எவனொருவன் கற்பனை மட்டும் செய்துகொண்டு, செயலைச் செய்யாமல் போகிறானோ, அவனால் எதுவும் சாதிக்க முடியாது என்பதே நிதர்சனம்.
சரி, இதுபோன்ற நிலையிலிருந்து நான் எப்படி வெளிவருவது என்று நீங்கள் கேட்டால், உங்களுள் இருக்கும் முட்டாளை சிறப்பாக கையாளத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்களே புத்திசாலியாக நினைத்துக் கொள்ளாமல், உங்களிடம் இருக்கும் முட்டாள்தனமான செயல்களை கையாள தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒரு முட்டாளை வைத்துக்கொண்டு, இந்த உலகத்தையும் மற்ற நபர்களையும் குறை கூறுவது முற்றிலும் தவறானது.
உங்களுக்குள் ஒரு முட்டாள் இருக்கிறான் என்பதை புரிந்து கொள்வதுதான் I AM WITH STUPID கொள்கை என சொல்லப்படுகிறது.