"வலுவாகவும் உற்சாகமாகவும் துடிக்கும் இதயம் நம்பிக்கைத் துடிப்பை இவ்வுலகிற்கு விட்டுச் செல்லும், அது மனிதகுலத்தின் மரபுகளை மேலும் சிறந்தது ஆக்கும்."-- Robert Louis Stevenson.
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் (பிறப்பு ராபர்ட் லூயிஸ் பால்ஃபோர் ஸ்டீவன்சன்; 13 நவம்பர் 1850 - 3 டிசம்பர் 1894) ஒரு ஸ்காட்டிஷ் நாவலாசிரியர், கட்டுரையாளர், கவிஞர் மற்றும் பயண எழுத்தாளர் ஆவார். இவரின் படைப்புகளான Treasure Island, Strange Case of Dr Jekyll and Mr Hyde, Kidnapped and A Child's Garden of Verses போன்றவற்றிற்கு மிகவும் பிரபலமானவர்.
இவர் கூறியதுபோல் வலுவாகவும் உற்சாகமாகவும் துடிக்கும் இதயமே தமது சந்ததியினருக்கு நம்பிக்கையை விட்டுச் செல்லும். அப்படி வலுவான இதயம் கொண்டவர்களே சிறந்த தன்னம்பிக்கையாளராகவும் சிறந்த தலைமையாளராகவும் பின் பற்றுபவர்களுக்கு சிறந்த மரபுகளை உருவாக்கிச் செல்கிறார்.
ஒருவர் தன்னம்பிக்கை மிகுந்தவர் என்பதை இந்த 8 செயல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
1.கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுதல்
பேசும்போது கண்களை தாழ்த்தி பேசாமல் எதிரே நிற்பவரின் கண்களை நேருக்கு நேராக பார்த்து ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது.
2. இறுகப் பற்றி கைளை குலுக்குதல்
சிறந்த தன்னம்பிக்கையாளர்களை அவர்கள் கைகளை குலுக்கும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். ஆம் ஒப்புக்கு நுனிக் கையை லேசாகத் பிடிக்காமல் உள்ளங்கைகள் ஒன்றோடு ஒன்று அழுந்தும்படியும் விரல்கள் மற்றவரின் கரத்தின் மீது நன்கு படியும் படியும் இறுகப் பற்றி கைகளை குலுக்குவதே சிறந்தது.
3.தெளிவான பேச்சு
சிலர் பேசும்போது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களை பேசுவது பழக்கம். தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தெளிவாக ஒருமுறை சொல்லும் போதே புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்வது சிறப்பு.
4. நேர்த்தியான உடை அலங்காரம்
ஏனோ தானோ என்று உடை அணியாமல் அந்தந்த இடங்களுக்கு ஏற்ற உடைகளை அணிந்து தகுந்த அலங்காரங்களுடன் இருப்பது தன்னம்பிக்கை கூட்டும் செயல். ஒருவரின் ஆடை அலங்காரங்களை வைத்தே மதிப்பீடு செய்யப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. அக்கறை மற்றும் உதவிகள் செய்தல்
நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மீதான அக்கறை மற்றும் தேவையான உதவிகளை முதல் ஆளாகச் சென்று செய்வதும் நம் மீதான நம்பிக்கையை கூட்ட வைக்கும். பிறர் நம் மீது வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையின் அடித்தளம்.
6. நிமிர்ந்த நடை
சிலர் எல்லா விஷயங்களிலும் திறமை உடையவராக இருப்பார்கள் ஆனால் அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருப்பதுடன் தலை கவிழ்ந்தும் நடப்பார்கள்.இப்படி இருந்தால் அவர்களின் முன்னேற்றம் நிச்சயமாக தடைபடும். நேர் கொண்ட பார்வை மற்றும் நிமிர்ந்த நடையுடன் "நான் இவற்றில் எல்லாம் சிறந்தவன்" என்னும் எண்ணத்துடன் பிறர் முன்னிலையில் நமது தனித்துவத்தை வெளிக்காட்ட வேண்டும்.
7. பண்பாகப் பழகும் முறை
எல்லாம் தெரியும் என்று அகங்காரத்துடன் பழகாமல் மற்றவர்களுடன் இணக்கமாக பழகுபவர்களை மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்வார்கள். பிறரிடம் பண்பாக பழகும் முறையை கடைப்பிடிப்பது முக்கியம். இதனால் நமது தன்னம்பிக்கை உயரும்.
8. கற்றுத் தருதல்
நாம் கற்றறிந்த விஷயங்களை பிறருக்கு கடத்தும் போது அந்த இடத்தில் நம்மை அறியாமலே நமக்குள் தன்னம்பிக்கை எழும் . ஏனெனில் ஒரு ஆசிரியர் போன்ற மனப்பான்மையுடன் பிறருக்கு கற்றுத் தரும்போது 'ஏதோ ஒன்று நமக்குத் தெரிந்திருக்கிறது' என்னும் எண்ணம் நம்மை மேலும் கற்கத் தூண்டும்.. இந்த பண்பு நம்மை விரைவில் தலைமை பொறுப்பிற்கு கொண்டு செல்லும்.