ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான். ஆனால் முதல் புறக்கணிப்பில் அவன் சோர்ந்து போகிறான். காதலிக்க நினைக்கிறான். காதலிக்க நினைத்தவள் பறக்கணிக்கிறாள். அதில் கரைந்து போகிறான். நெருப்பிலிருந்து எழுகிற ஃபீனிக்ஸ் பறவை மாதிரி புறப்படத் தெரிவதில்லை.
வேலைதேடும் இளைஞன் LIC ஏஜென்சி எடுப்பான். கையில் பை கழுத்தில் டை என்று ஜோராக புறப்படுவான். வாடிக்கையாளர்களின் அலட்சியம் அவமதிப்பு அக்கறையின்மை இதனால் வாடிப் போவான். 100 பேர் புறப்பட்டால் 5 பேர்தான் வெற்றி பெறுகிறார்கள். ஏன்? முதல் புறக்கணிப்பில் முனை முறிந்து போவார்கள்.
இருவர் எனற படம் மணிரத்னம் படம். எம்.ஜி.ஆர் கலைஞர் இருவரையும் மனதில் வைத்து எடுத்த படம் வாய்ப்புக்காக பல அவமானங்கள் அமரர் எம்.ஜி.ஆர் பட்ட வேதனைகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. பல நூறு புறக்கணிப்பு களை ஜீரணித்தே எம் ஜி ஆர் உருவானார். நடிப்புக்கே இலக்கணம் வகுத்த சிவாஜி முதல்முறை காமரா முன் நின்றபோது மூஞ்சி சரியில்லை. நடிப்பு எப்படி வரும் எனற கேலியை சந்தித்தார். ஆனால் புறக்கணிப்பை வென்றது அவரது அர்ப்பணிப்பு.
உலகத்தில் பல புதிய உண்மைகளைக் கண்டறிந்தவர் கலிலியோ. கத்தோலிக திருச்சபை அவரைக் கண்டித்தது. மதவிரோதி என அறிவித்தது. அவரை மன்னிப்பு கேட்கச் சொன்னது. ஆனால் அப்போது அப்படி நடந்ததற்காக போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டார். கலிலியோ பற்றிய அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார். கலிலியோ கண்டுபிடிப்பு கண்டது புறக்கணிப்பு. ஆனால் வென்றது அர்ப்பணிப்பு. முன்னேற்றப் பாதையில் நூறுபேர் புறப்பட்டால் முதல் புறக்கணிப்பிலேயே தொண்ணூறு பேர் நின்றுவிடுகிறார்கள்.
ஆனால் முதல் புறக்கணிப்பை முறியடித்தாலே 90 சதவீதம் வெற்றி வந்துவிட்டது என்று பொருள். மீதி 10 சதவீதம்தான் பாக்கி என்பதை புரிந்துகொள்கிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
திருக்குறளை சங்கப் புலவர்கள் புறக்கணித்தார்கள் என்ற ஒரு கதை உண்டு. உலகின் தலைசிறந்த தமிழனே புறக்கணிப்பைக் கண் டவன் வென்றவன். அவனது நூலை பொற்றாமரை குளத்தில் விட சங்கப் பலகை அதை ஏந்தி வந்து குறள் அருமை என்று கூறியது. கம்பனின் கவிதையை அரங்கேற முடியாதபடி தில்லை வாழ் அந்தணர்கள் புறக்கணித்தனர். ஒருநாள் தீட்சிதர் வீட்டில் நாகம் தீண்டி அவர் மகன் இறந்தபோது அந்தணர் அனைவரும் அங்கு கூடியிருக்க கம்பன் நாகப்பாம்பு படலம் படிக்க விஷம் தீட்டப்பட்ட சிறுவனாக உயிர் பெற்றான். புறக்கணிப்பை வென்று கம்பன் கவிஞன் ஆனான்.
திருவரங்கத்து அந்தணர்களும் கம்பனைப் புறக்கணித்ததற்கு ‘’என்னைக் குற்றம் கண்டு என் நாவைப் பழிப்பினும் நல்லோரன்றே மற்ற நாவலரே" என்ற சடகோப அந்தாதியே சான்று. இவ்வளவு ஏன் மகாகவி பாரதியை தமிழ் உலகம் முதலில் புறக்கணித்தது. ஆனால் பின்னாளில் அவர் போற்றப்பட்டு இன்று வரை எல்லோர் நினைவிலும் வாழ்கிறார். புறக்கணிப்பை புறக்கணித்த பாரதி ஜெயித்தார். புறக்கணிப்பை புறக்கணியுங்கள். வெற்றி நிச்சயம்.