

வாழ்க்கைப் பயணத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் மற்றவர்களிடமிருந்து கைதட்டலையும் பாராட்டையும் எதிர்பார்ப்பது மனித இயல்பு. ஆனால், பல நேரங்களில் நம்முடைய உழைப்பும் திறமையும் மற்றவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால் ஏற்படும் ஏமாற்றமும், 'நமக்குத் திறமை இல்லையோ?' என்ற சந்தேகமும் நம்மைப் பின்னோக்கித் தள்ளக்கூடும்.
மற்றவர்களின் பாராட்டுக்காகக் காத்திருப்பதை விட, நம்மை நாமே அங்கீகரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் ஒரு உன்னதமான கதை இது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்திடம் நீங்கள் காட்டும் அன்புதான், உங்கள் வாழ்வின் வெற்றிக்கான முதல் படி.
'நான் திறமைசாலியாகத் தான் இருக்கிறேன்; ஆனால் யாருமே என்னை பாராட்டியதில்லை' என்று வருத்தப்படுகிறீர்களா? இந்தக் கவலையை உடைக்கத்தான் இந்த கதை.
ஒரு ஊரில் ஒரு நபர் இருந்தார். அவர் மிகவும் திறமைசாலிதான். ஆனால் என்னவோ தெரியவில்லை, அவரை யாருமே பாராட்டியதில்லை. ஆரம்பத்தில் இதை அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றாலும், போகப் போக அவருக்கு மனதில் இந்த வருத்தம் ஏற்பட்டது.
அந்த நபர், தன் மனக்குறையை ஆசிரியரிடம் பகிர்ந்துகொண்டார். அதற்கு அந்த ஆசிரியரோ, "உன்னைச் சுலபமாகப் பாராட்டக்கூடியவர் ஒருவர் உள்ளார். அவருக்கு உன்னை பாராட்டக்கூடிய மனம் இருக்கிறது. நீ அந்த நபரிடம் தினமும் பாராட்டை வாங்கிவிட்டால் போதும்; அதன் பிறகு இந்த உலகமே உன்னை பாராட்டத் தொடங்கிவிடும். நீ அந்த நபரின் பாராட்டை மட்டும் வாங்குவாயா?" என்று கேட்டார்.
அந்த நபருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. "அப்படி ஒரு நபர் இருக்கிறாரா? யார் அது?" என்று கேட்டார்.
அதற்கு அந்த ஆசிரியர் சொன்னார், "நீ நேராக உன் வீட்டிற்குச் சென்று, அங்கிருக்கும் நிலைக்கண்ணாடியில் பார்; உன் உருவம் தெரியும். அந்த உருவத்திடம் பாராட்டை வாங்கு. உன்னை நீயே தினமும் பாராட்டிக்கொள். இந்த உலகத்துடைய பாராட்டு தானாக உன்னிடம் வந்து சேரும்," என்று கூறினார்.
இன்றைய வேகமான உலகில், மற்றவர்கள் ஒருவரின் திறமையைக் கண்டுபிடித்துப் பாராட்டும் மனநிலையில் பெரும்பாலும் இல்லை. அதற்காக உங்களுக்குத் திறமையில்லை என்று அர்த்தம் இல்லை. நேரம் வரும்போது உங்களுக்கான பாராட்டும் அங்கீகாரமும் உங்களை வந்து சேரும். அதுவரை உங்களுடைய மனம் தளராமல் திடமாக இருக்க, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டியது அவசியம்.