எல்லோரும் திறமை உடையவர்கள்தான். எல்லோரும் எல்லா விஷயத்திலும் சமமான திறமை உடையவர்களாக இருக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் ஓவ்வொருவர் திறமைசாலியாக இருப்போம். இதை அடையாளம் கண்டு வளர்க்க வேண்டும். வழிமுறைகளை கண்டவர்கள் வெற்றியின் முதல் படி ஏறுகிறார்கள். கடும் உழைப்பு இரண்டாம் படி. படிப்பிலும் தொழிலிலும் வெற்றி பெற்றவர்களின் வெற்றி ரகசியம் அவர்கள் கடின உழைப்பே.
இப்போதெல்லாம் திருப்பதி போவது சுலபம். அனந்தாழ்வான் என்ற பக்தன் திருமலையில் பெருமாள் கைங்கர்யத்திற்காக உழைத்து அங்கு தோட்டம் போட்டார். அவரின் நிறைமாத கர்ப்பிணியும் உழைத்தார். இந்த வைராக்கியம் இருந்தால் வெற்றி நிச்சயம். விடா முயற்சி வெற்றியின் அடுத்தபடி.
அமெரிக்க ஹென்றி ஃபோர்டை அதிர்ஷ்டம் மேலேற்றவில்லை. காரணம் அவர் 5 முறை திவாலானவர். வெற்றியிலிருந்து கற்றுக்கொள்வதைவிட தோல்வியிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்கிறார் அவர்.
1990களில் முடிந்த கதை என்று சொல்லப்பட்டTVS மோட்டார் கம்பெனியை இன்று ஆயிரம் கோடிக்குமேல் வரவு செலவு உடைய நிறுவனமாக்கி ஜெயித்தார் வேணு சீனிவாசன். திறமை உள்ளவர் தம் மீது வைக்கும் நம்பிக்கைதான் தன்னம்பிக்கை. திறமையே இல்லாமல் தன்மீது நம்பிக்கை வைத்தால் அது அசட்டுத்தனம்.
தன்னம்பிக்கையை தகர்த்து எறிய அதைத் தலைக்கனம் என்று கையாலாகாதவர்கள் முத்திரை குத்துவார்கள். குமரிக்கரையில் திருவள்ளுவர் நிற்பதுபோல் உயர்ந்து நில். தன்னம்பிக்கையோடு பொறுமையும் தலைமைப் பண்புகளும் இருந்தால் வெற்றி நிச்சயம். பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றி என்று நினைக்க வேண்டாம். பணத்துக்கு அப்பாலும் வெற்றி தோல்வி கணக்கிடப்படும். நேர்மை சுயமரியாதை கௌரவம் இவையெல்லாம்கூட வெற்றி தோல்வியின் நிர்ணயம் புள்ளிகள்.
ஏழ்மையில் நேர்மை பாராட்டுக்குரியது. ஆனால் நேர்மைக்கு ஏழ்மையே பரிசு என்றால் சமூகம் தவறான பாதையில் போகிறது என்று பொருள். திருவள்ளுவரின் ஊக்கம் உடைமை ஆய்வினை உடைமை. இடுக்கண் அறியாமை வினைத்திட்பம் இவைகளையெல்லாம் புரிந்துகொண்டால் தலைவராகலாம். எல்லாவகையிலும் உன்னைத் தகுதிபடுத்து ஈடுபடு. போராடு வெற்றிகொள். புகழோ இகழோ இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு வெற்றி நிச்சயம்.