ஒன்று நமக்கு விபரீதமாக நடந்தால், உடனே நாம் மனம் உடைந்து உட்கார்ந்துவிடுகிறோம். அது ஏன் நடந்தது? எதற்கு நடந்தது? என்ன காரணம்? என்று அதைப் பற்றியே நினைத்துக்கொண்டு, நேரத்தை வீணாக்கிக்கொண்டு சோக நிலைக்கு சென்றுவிடுகிறோம். ஆனால் ஒரு விஷயத்தை எப்படி பார்ப்பது என்று தெரிந்துக்கொண்டாலே எளிதாக அதிலிருந்து வெளிவந்துவிடலாம்.
எனவே இந்த பதிவில், ஒரு சில மோசமான விஷயங்களில் உங்களது பார்வை எப்படி இருக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ளலாம்.
1. அசௌகரியம்:
நம்முடைய இலக்கின் பாதையில் எப்போதும் நாம் நினைப்பது நடக்கும் என்றும், நமக்கு சாதகமாகவே நடக்கும் என்றும் நினைத்துவிடக்கூடாது. பல சமையங்களில் நமக்கு சாதகமில்லாத பல விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். அப்போது துவண்டு உட்கார்ந்துவிடக் கூடாது. அசௌகர்யத்தை உங்களின் வளர்ச்சியாகப் பாருங்கள்.
2. பிரச்சனைகள்:
நமக்கு பிரச்சனைகளைக் கொடுக்கவே சிலர் வருவார்கள். அப்போது பிரச்சனைகளைக் கண்டு சோர்வடைந்துவிடக் கூடாது. பிரச்சனைகள் இவ்வளவு வருகிறதே என்று எண்ணி அதனை விட்டுப்போக நினைக்கவே கூடாது. பிரச்சனைகளை சவாலாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.
3. நிராகரிப்பு:
இந்த நிராகரிப்பைப் பார்க்காத மனிதர்களே கிடையாது. நிராகரிப்பை நிராகரித்துவிட்டால் அடுத்த நிலைக்கு செல்வது சுலபம். இந்த நிராகரிப்புகள் உங்களை வேறு திசைக்கு அழைத்து சென்று முன்னேற வைக்கப்போகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
4. இருள்:
உங்களின் அனைத்து திசைகளிலும் இருள் வந்து அண்டும் போது இது சீக்கிரம் ஒளி வரப்போவதற்கான அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த இருளில் நிச்சயம் ஒரு சிறு ஒளி இருக்கும், அதனைக் கண்டுப்பிடித்து பெரிதாக்குவது உங்களின் முயற்சியே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
5. பயம்:
இந்த பயம் ஒரு குரு. உங்களுடைய முயற்சியின்போது நீங்கள் அடையும் பயம் பலவற்றை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். ஆகையால் இதனை ஒரு கண்டிப்பான ஆசிரியராக எண்ணுங்கள். ஆசிரியர் கண்டிப்புடன் இருந்தால்தான் நல்ல மாணவன் உருவாகுவான் என்பது உண்மை.
6. வலி:
அதிக வலியே அதிக ஆற்றலைக் கொடுக்கும். வலியை எதிர்ப்பவன் அந்த வலியோடுதான் அதனை எதிர்ப்பான். வலியும் சீக்கிரம் போகாது, அவனும் எளிதில் விடமாட்டான். அந்த விடாமுயற்சியின் பரிசாக கிடைப்பதுதான் எதையும் எதிர்க்கொள்ள உதவும் ஆற்றல். ஆகையால் வலிக்கிறது என்று நிறுத்திவிடாதீர்கள்.
7. தோல்விகள்:
தோல்விகளை நீங்கள் பாடங்களாகப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தோல்விகளிலும் ஏதாவது ஒன்றை நீங்கள் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள். அந்த பாடம் தான் உங்களின் நிலையான வெற்றிக்குத் துணைப்புரியும்.
துவண்டுப்போகும் போதெல்லாம் அதற்கு காரணம் தோல்விகளா? பயமா? நிராகரிப்பா? என்று தெரிந்துக்கொண்டு அதனை சரியான முறையில் பார்த்து மீண்டும் எழுந்து முயற்சி செய்யுங்கள்.