நாம் அனைவரும் மகிழ்ச்சி, அமைதியை தேடிப் பலரும் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறோம். உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.
மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத்தேடி அலைகின்றான். இதில் கிடைத்து விடாதா? அதில் கிடைத்து விடாதா? என்ற ஏக்கத்தோடும், ஆதங்கத்தோடும் இங்கும் அங்கும் அலைகின்றான்.
இறுதியில் அவனுக்குக் கிடைப்பது ஏமாற்றமே.மகிழ்ச்சி என்பது வெளியே விலை கொடுத்து வாங்கக் கூடிய பொருள் அல்ல.
நம்மிடையே மகிழ்ச்சி இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதை நாம் முறையாகக் கையாள்கிறோமா? என்பதுதான், முக்கியமான கேள்வி. அப்படி இருந்தால் எல்லோரிடமும் புன்முறுவல் செய்து கொண்டிருப்போம்.
ஏதோ ஒன்றை இழந்தது போல், நமக்கு நாமே பேசி, மன உளைச்சலுடன் இருப்பதை, பலரின் வாழ்வில் காண முடிகிறது.
குடும்ப பாரம், அலுவலகத்தில் கூடுதல் பணி, யாராவது ஒருவர் நம்மைப் பற்றி தவறாகப் பேசி விட்டால், அவர் மீது தொடர் கோபம் என்று, மனதில் போட்டு, குப்பைத் தொட்டியாக மாற்றி வைத்திருக்கிறோம்.
குப்பைத் தொட்டியில், குப்பை அகற்றாமல் வைக்கப்பட்டு இருந்தால் என்னவாகும்? துர்நாற்றம் ஏற்பட்டு விடும் அல்லவா அதுபோல்தான் நம் மனமும். மனம் எப்போதும், மகிழ்ச்சியைத்தான் எதிர்பார்க்கிறது.
ஒருவர், உங்களைப் பாராட்டினாலும், குறை சொன்னாலும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பாராட்டும்போது பறப்பதும், குறை சொல்லும்போது சோர்வதும் என இருந்தாலும், நம்முடைய வளர்ச்சி வேகத்தடையாய் ஆங்காங்கே நிற்கும்.
யார் என்ன சொன்னால் என்ன? உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் புறம் பேசி இருந்தால், உங்கள் மனமே உங்களைத் தண்டித்து விடும். அதற்கு தயவு செய்து இடம் கொடுத்து விடாதீர்கள். வீட்டுக்குச் சென்றவுடன், செருப்பை கழற்றி வைப்பது போல், சுமந்துக் கொண்டு இருக்கும் பாரத்தையும், வாசலிலேயே இறக்கி வைத்து விடுங்கள்.
அடுத்தவர் பற்றி, உங்களிடம் யாராவது குறை கூற வந்தால், அதைத் தவிர்த்து விடுங்கள். ஒவ்வொருவருக்குள்ளும் சாதிக்கும் ஆற்றல் ஏராளமாக உள்ளது. அதைக் கண்டு பிடித்து, அதன் வழியில் பயணிக்கும்போது, இன்று கிடைக்காவிட்டாலும், என்றாவது ஒரு நாள் வெற்றி கிடைத்தே தீரும்.
ஏனென்றால், உண்மையான உழைப்புக்கு என்றும் தோல்வி இல்லை. வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம் இது தான். எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும்.
இந்த உண்மையை மனிதன் எப்போது உணர்ந்து கொள்கின்றானோ, அப்போது அவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அப்போது அவனது மகிழ்ச்சியை அவனிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாது. மகிழ்ச்சி வேறு எங்கும் இல்லை. நம்மிடத்தில்தான் இருக்கிறது.