"வாழ்க்கை நிறைய சைகைகள் கொண்ட பெரிய பாதை. குழிகளில் பயணிக்கும்போது, மனதைச் சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள். வெறுப்பு, தவறு, பொறாமை, இவற்றை விட்டு தூர விலகுங்கள். உங்கள் எண்ணங்களைப் புதைத்து விடாமல், உங்கள் நோக்கை யதார்த்தத்திற்குக் கொண்டு வாருங்கள். விழிப்புடன் வாழுங்கள். -Bob Marley.
பாப் மார்லி "ரெக்கே' இசைக்கான உலகத் தூதராகப் பணியாற்றியதுடன் ஜமைக்காவின் இசை மற்றும் கலாசாசாரத்தின் உலகளாவிய அடையாளமாகவும் கருதப்படுகிறார்.
சரி. இவரின் கூற்றுக்கு வருவோம். வாழ்க்கை எப்போதும் அனைவருக்கும் மகிழ்ச்சியாகவோ அல்லது துக்கமாகவோ இருப்பதில்லை. இரவும் பகலும் மாறி மாறி வருவது போல் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான உணர்வுகள் நிகழ்வுகள் அவரவர் சூழலுக்கேற்ப மாறி மாறி வருவதுண்டு.
அவர்கள் காதலர்கள். கல்லூரியில் துவங்கிய காதல் பல்வேறு போராட்டங்களை சந்தித்து கல்யாணத்தில் முடிந்தது. இருவரும் அறிவியல் படித்து விஞ்ஞானிகளாக ஆகவேண்டும் என்ற இலக்கில் இருந்தவர்கள். காதலில் உறுதியாக இருந்த அவர்களின் அன்பைப் பார்த்து ஊரே வியந்தது. அவர்களின் காதல் வாழ்க்கை அழகான பெண் குழந்தையைத் தந்தது. ஆனால் விதி? குழந்தை பிறந்து வீட்டுக்கு வருவதற்குள் காதலன் விபத்தில் உயிரிழக்க. அவர்களுக்கு எதிராக இருந்த உறவுகள் முதல் ஊர் வரை அனைவரும் அந்தப் பெண்ணின் நிலை நினைத்து பரிதாபம் கொண்டனர்.
கையில் குழந்தையுடன் காதல் கணவனை நினைத்து அழுதழுது தணிந்த அந்தப் பெண்ணைத் தேடிவந்தது பிரசித்திபெற்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்த பணிக்கான உத்திரவுக் கடிதம். அவள் முடிவு செய்தாள். குழந்தையின் 5 தாவது மாதம் முடிந்ததும் தன் பெற்றோரிடம் ஒப்படைத்தாள். தனக்கு விருப்பமான அந்த ஆராய்ச்சி பணியில் சேருவதற்காக ஆயத்தமானாள். மீண்டும் ஊர் அவளைப் பற்றிய விமர்சனங்களைப் பேசியது.
அவளின் நிலையை அறிந்து அவளைக் காண வந்த தோழியும் இந்த செய்தியை கேள்விப்பட்டு அவரை வியந்து பாராட்டினார்.
அப்போது அந்தப் பெண் சொன்னார் "நானும் எனது கணவரும் காதலித்தோம். அதற்கு பரிசாக ஒரு பெண் குழந்தையும் எனக்கு ஆண்டவன் அருளால் கிடைத்தது. இப்போது எங்கள் லட்சியத்திற்கான நேரமும் வந்து இருக்கிறது. இந்த வேதனையில் நான் இதைத் தவறவிட்டால் வாழ்க்கை முழுவதும் எனக்குள் ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் வாழ்க்கை அனைவரும் நினைப்பதுபோல் சாமான்யமாக இருப்பதில்லை. இது போன்ற வேதனைகளும் எதிர்பாராமல் வருவதுண்டு. ஆனால் அதற்காக நமது இலக்குகளை எந்த காலத்திலும் விட்டுவிடக்கூடாது. இதை என் கணவரே என்னிடம் வலியுறுத்தி இருக்கிறார். நிகழும் யதார்த்தங்களை ஏற்று இந்த பணியை நான் மேற்கொண்டால் மட்டுமே அவரது ஆத்மா சாந்தி அடையும்" என்று தெளிவாக கூறியதை கேட்ட அந்த தோழி இந்த பெண்ணை மிகவும் பாராட்டினார்.
அந்த ஆராய்ச்சி பணியில் சேர்ந்த இந்தப் பெண் பின் நாட்களில் ஆகப்பெரும் ஒரு கண்டுபிடிப்புக்கான பின்னிருந்து நாட்டினரால் புகழப்பட்டார். கணவனை இழந்த வேதனையை மட்டும் மனதில் இருத்தி தேடிவந்த பணியை உதறித் தள்ளி இருந்தால் இவரது இலக்கு திசை மாறி சாதாரணப் பெண்ணாக இவரது வெற்றி மறைக்கப்பட்டிருக்கும்.
ஆகவே நமது வாழ்வில் எழும் வேதனைகளுடன் பிறர் மீதான வெறுப்பு பகை கோபம் போன்றவற்றையும் விட்டுவிட்டு யதார்த்தங்களை ஏற்று தெளிவான வெற்றி பெறுவோம்.