மூங்கில் மனிதராக உயர்ந்து நிற்போம்!

motivation Image
motivation ImageImage cedit - pixabay.com

புத்திசாலி மனிதர் அவர். ஏதோ ஒன்று அவரது வெற்றியைத் தடுத்து வந்தது. அவர் மனதில் வேதனை தந்தது. ஒரு விரும்பத்தகாத சூழலில் இந்த புவியுலக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலக வேண்டும் என முடிவு செய்தார். அவரது பணி, உறவுகள், இறையாண்மை என அனைத்தையும் விட்டுவிட்டு துறவிகள்போல பற்றற்று வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குள் சென்றார்.

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகளை பேச விரும்பினார். அவர் இறையாண்மையில் சிறந்தவர் என்பதால் கடவுளும் அவர் அழைத்த அழைப்புக்கு கீழே இறங்கி வந்தார். "கடவுளே நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்களேன்" என்று கேட்டார்.

அவரை உற்றுப்பார்த்த கடவுளின் பதில் அவரை வியப்பில் ஆழ்த்தியது" 

     
"ஒருமுறை காற்றை சுற்றிப்பார் மனிதா… காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?" 

"ஆமாம்" 

"நான் புதர்செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதிலிருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் கவனித்து வந்தேன். அவைகளுக்கு தேவையான வெளிச்சம், நீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன். புதர் செடியின் விதை பூமியிலிருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.

ஆனால் மூங்கில் விதையிலிருந்து எந்த மாற்றமும் முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனையும் நான் கைவிடவில்லை. இரண்டாவது ஆண்டும் புதர் செடி வேர்விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனால் அப்போதும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனால் நான் அதனை கைவிட்டு விடவில்லை" என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.

"மூன்றாவது ஆண்டும் நான்காவது ஆண்டும் கடந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்து விடவில்லை. ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை முளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும் வெகு சாதாரணமாகவும்தான்  இருந்தது. ஆனால் ஆறு மாதம் கழித்து பார்த்தால் மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்து பார்க்கவே கம்பீரமாக இருந்தன. இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை. தான் வாழ்வதற்கு தேவையான அளவிற்கு வேர்களை பரப்பி இருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது பின்னால்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவங்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் தந்துள்ளேன். அவற்றால் கையாள முடியாத பிரச்னைகளை அவற்றுக்கு நான் எப்போதும் தருவதில்லை" என்று சாந்தமாக பதில் அளித்தார் கடவுள்.

மேலும் கடவுள் "உனக்கொன்று தெரியுமா குழந்தாய்? நீ எப்போதெல்லாம் பிரச்னைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டு இருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை, உன்னையும் நான் விட்டு விடமாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் நட்புக்காக கூட இருப்பார்கள் அல்லவா? மூங்கிலும் புதர் செடிகளும் காடுகளை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறான தன்மை கொண்டவை என்பதை புரிந்து கொள்".

இறுதியாக அவர் சொன்னதுதான் சிறப்பு…

"உன்னுடைய நேரம் வந்துவிட்டது நீ வளர்வதற்கான நேரம் இது தான்" மெய்மறந்து நின்ற அந்த மனிதர் ஆச்சரியத்துடன் கேட்டார் "என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்"

"மூங்கில் வளரும் அளவுக்கு உன்னாலும் வளர முடியும் "என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

மீண்டும் கேள்வி எழுப்பினார் மனிதர்" எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்" என்று.

கடவுளும் சளைக்காமல் "அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்" என்றார். அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா வியந்து போனார் துறவியாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.

 "ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும். இனி முடிவு உன் கையில்" என்று கூறி மறைந்தார் கடவுள்.

துறவியாக வேண்டும் என்று நினைத்து காட்டுக்குப்போன அந்த மனிதர் நம்பிக்கையுடன் புறப்பட்டார். எதிர்வரும் வாழ்வில் வாழ்வில் மூங்கில் மனிதனாக உயர்ந்து காட்ட வேண்டும் என்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com