காலம் மாறும். நிச்சயம் மாறும் காத்திரு உரிய காலம் வரும் வரையில் காத்திரு. உனக்கென நிச்சயம் ஒரு காலம் வந்தே தீரும் இந்த நம்பிக்கையை மட்டும் எக்காலத்திலும் எதற்காகவும் இழந்து விடக்கூடாது. நம்பிக்கையுடன் முயற்சியும் உழைப்பும் திட்டமிடலும் சேர்ந்தால் காலம் என்ன செய்ய முடியும் . நேற்று முடியாதது இன்று முடிந்தது. இன்று முடியாதது நாளை முடியும். நம்பிக்கையில்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது என்ற ஜான்சன் கருத்தை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும் .
நம்பிக்கை அது இருந்தால் மட்டுமே முயற்சி பிறக்கும். நம்பிக்கை இல்லாத முயற்சி சிறக்குமா? அதனால்தான் ஜான்சன் மட்டுமல்ல எல்லா அறிஞர்களும் வலியுறுத்தியது முதலில் நம்பிக்கை. அதன் பிறகு நிச்சயம் முயற்சியும் பிறக்கும். நம்பிக்கை அழிந்தால் முயற்சியில் ஒரு தொய்வு ஏற்படவே செய்யும். காலத்தோடு ஒன்றிப்போதல் ஒரு குணம். காலத்தை புரிந்து கொள்ளுதல் அவசியம். அப்படி இருப்பின் எதனையும் நிறைவேற்றிட முடியும் என்ற ஒரு நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உரிய காலம் நேரம் எது என அறியும் திறன் வேண்டும். பருவத்தில் பயிர் செய் என்பது இதுதான். நல்ல காலம் பிறக்கும். அது நம்பிக்கை. காலம் கனிகிறது அது முயற்சியின் தொடக்கம் இதோ எனக்குரிய காலம்! இதுவே செயலின் தொடக்கம்.
வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம்தான். போராடினால்தான் ஜெயிக்க முடியும். இன்று இருக்கும் நிலையிலேயே நாம் இருக்க கூடாது. இப்பொழுது இருக்கும் நிலையில் இருந்துதான் விரும்பும் நிலைக்கு வர ஒருவன் முயற்சி செய்யும்போது எதிர்ப்படும் நிலையான போராட்டம்தான் வாழ்க்கை.
வளர்ச்சி வேண்டும். மாற்றம் வேண்டும். மாறுவதுதானே வாழ்க்கை. மாற்றம் வளர்ச்சியாக இருக்க வேண்டும். எதுவும் சுலபத்தில் கிடைக்காது. மலர் பறித்தால் முள். தேன் எடுத்தால் குளவி... இதற்கெல்லாம் அஞ்சலாமா? மாற்றம்- உயர்வு- வளர்ச்சி குறித்த போராட்டம் வாழ்க்கை. அது முட்படுக்கையாகவும் இருக்கலாம். வியர்வை இன்றி உழைப்பு இருக்க முடியாது. வலியில்லாத பிரசவம் நடக்காது.
முதலில் நமக்கென்று ஒரு பொறுப்பை தேடிக்கொள்ள வேண்டும் சும்மா இருப்பது சுகம் அல்ல சுமை. ஒரு பொறுப்பு இருந்து அதனை கடமையாக ஏற்று அதற்காக உழைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி சுகமானது. தனியானது.
கடமைக்கான போராட்ட களம் வாழ்க்கை. தோல்வியை எதிர்க்கும் யுத்தம் வாழ்க்கை. உனக்காக ஒரு காலம் வரும் வரையில் காத்திரு நம்பிக்கையோடு காத்திரு.