எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் கடைசியாக யாருக்கு உதவினீர்கள்?
ஒரு கதை சொல்லட்டுமா? மன்னர் ஒருவர் அடர்ந்த காட்டில் வேட்டைக்குப் போனார். வேட்டை மும்முரத்தில் மன்னரும் இளவரசனும் தனித்துப் போனார்கள். காட்டில் நடுவே குடிசை இருப்பதைக் கண்டு அங்கு சென்றார்கள். அது விறகு வெட்டியின் குடிசை. கதவைத்தட்ட, முகம் சோர்ந்து உடையெல்லாம் அழுக்கடைந்து இருந்த அவர்களை அவனால் அடையாளம் காண முடியவில்லை. தன்னிடம் இருந்த எளிய உணவினைக் கொடுத்து அவர்களை உபசரித்தார். அவனது உபசரிப்பில் நெகிழ்ந்த மன்னர் தன் முத்திரை மோதிரத்தைக் கழட்டி விறகு வெட்டியிடம் கொடுக்க அவன் தான் செய்த உதவிக்கு கைம்மாறு வேண்டாம் என மறுத்து நாட்டுக்குச் செல்லும் வழியையும் காட்டினான்.
நகருக்குள் வந்த அவர்களை அடையாளம் கண்டு கொண்ட செல்வந்தன் ஒருவன் அவர்களுக்கு விழுந்து விழுந்து உபசரிப்பு செய்தான். தன் வாகனங்களைத் தயார் செய்து தந்தான். மன்னரும் புன்னகையுடன் கிளம்பினார். இதைப் பார்து இளவரசர்", வெறும் கூழ் கொடுத்த விறகு வேட்டிக்கு முத்திரை மோதிரம் கொடுக்க முனைந்த நீங்கள் இத்தனை உபசாரம் செய்த செல்வந்தருக்கு எதுவும் கொடுக்கவில்லையே" என்று கேட்க அரசர், "இந்த செல்வந்தருக்கு நம்மைப் பற்றித் தெரியும். பலன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு எல்லாம் செய்தான். ஆனால் விறகு வெட்டியோ நாம் இக்கட்டான நிலையில் இருப்பதைப் பார்த்து தன் சொற்ப உணவையும் தந்தான். அவர் காட்டிய கனிவு விலை மதிப்பில்லாதது. அதனால்தான் மோதிரம் தர முனைந்தேன்." என்றார். இக்கதையில் வரும் விறகு வெட்டிபோல் எத்தனை பேர்கள் பிறர்க்கு உதவுகிறார்கள்?
பிறரை நேசிப்பதில் கணக்கு பார்ப்பதால் பிறரை நேசிப்பதையோ, நாம் நேசிக்கப்படுவதையோ தடுத்து, தனிமைப் படுத்தி வாழ்க்கையை வெறுமையாக்கி மகிழ்ச்சிக்கு பதில் உளைச்சலை மனதில் ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சி என்பது உள்ளுக்குள் நிறையும் உணர்வு என்பதை மறந்து விட்டு அதை பொருட்களில் பார்த்தால்தான் திருப்தி வருகிறது. பிறந்த நாளில் சந்தோஷத்தைக் காட்ட இனிப்பு தருவதுபோல் பொருட்களாக இருந்தால்தான் , நான் இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பிறருக்குத் காட்ட முடியும் என்றே மனம் எண்ணுகிறது.
போதாக்குறைக்கு "நான் அவனுக்கு எவ்வளோ உதவிகள் செய்துள்ளேன். பதிலுக்கு அவன் எதுவும் செய்யவில்லை" என்றெல்லாம் தவிப்பு ஏற்படுகிறது. இன்றைய உலகில் 90 சதவீத மக்கள் மனநிறைவு இன்றி தவிப்பதற்குக் காரணம் படிப்போ, பதவியோ, வேலையோ, பொருளாதாரமோ அல்ல. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் மனப்பான்மை இல்லாமல் தங்களைத் தாங்களே இறுக்கமாக்கிக் கொள்வதுதான் என்கின்றது வாழ்வியல் ஆய்வுகள்.
உங்களிடமிருந்து வெளிப்படுவது சிறு புன்னகையோ வழிகாட்டி ஒற்றை விரல் நீட்டும் அளவேயான உதவியோ எதுவாக இருந்தாலும் மனப்பூர்வமாக செய்யுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவரை நேசியுங்கள். வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சி மலரும்.