Mark Manson: வாழ்க்கைக்கான 3 விதிகள்!
இந்த பதிவில் நான் கூறப்போகும் வாழ்க்கைக்கான 3 விதிகள் அனைவருக்குமே ஒத்துவரும் என எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலை, இருக்கும் சூழல், புரிந்து கொண்டு செயல்படும் தன்மையைப் பொறுத்து இவை மாறுபடலாம். இருப்பினும் பொதுவாக இந்த கருத்துக்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படும் என நம்புகிறேன்.
இந்த மூன்று விதிகளைக் கூறியவர் பிரபல எழுத்தாளர் ‘மார்க் மேன்ஷன்’. இவர் எழுதிய The Subtle Art Of Not giving a f**k என்ற புத்தகம் உலகளவில் பிரபலமாகும். வாழ்க்கைக்கான விதிகளில் முதலாவதாக இவர் என்ன கூறுகிறார் என்றால்,
Take Responsibility for Everything.
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது என அனைத்திற்குமான முழு பொறுப்பை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய தவறாக இல்லை என்றாலும் அந்த பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்வது நல்லது. எப்போது நாம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதை ஒதுக்கி வைக்கிறோமோ, அது பிறரை குறை கூறும் மனநிலையை நமக்கு ஏற்படுத்தும். சிலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள், “என்னை என்னுடைய பெற்றோர் படிக்க வைக்கவில்லை. நான் பணக்காரன் இல்லை. என் வாழ்க்கை மோசமானதற்கு அரசாங்கம் தான் காரணம்” என தங்களின் வாழ்க்கை மோசமாக இருப்பதற்கு பிறரையே காரணமாக சொல்வார்கள்.
ஆனால் இப்படி சொல்வதால் நமது வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. “சரி, என் வாழ்க்கை மோசமாக மாறிவிட்டது. அதற்கான முழு பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு, இதை மாற்றி அமைப்பதற்காக என்ன செய்யப் போகிறேன்” என சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம்.
No Bad Emotions, Only Bad Reactions.
இந்த இரண்டாவது விதி நம்முடைய மோசமான உணர்வுகள் பற்றியது. இவர் என்ன சொல்கிறார் என்றால், மோசமான உணர்வென்று எதுவும் இல்லை. ஒரு விஷயத்திற்கு நாம் மோசமாக எதிர்வினை செய்வதே மோசமான உணர்வு என்கிறார். அதாவது கெட்ட விஷயங்களை நாம் எப்படி புரிந்து கொண்டு எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான், நாம் எப்படி உணர்கிறோம் என்பது அடங்கியுள்ளது. இதன் காரணமாகவே சிலர் தேவையில்லாமல் சாதாரண விஷயத்திற்கும் சோகமாக இருப்பார்கள். சிலர் பெரிய தவறு செய்துவிட்டு சோகமின்றி தைரியமாக இருப்பார்கள். அனைத்துமே நாம் எப்படி எதிர்வினை புரிகிறோம் என்பதைப் பொறுத்துதான்.
Radical Growth
உங்கள் வாழ்வில் நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும், செயல்களும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி பிறருடைய முன்னேற்றத்திற்கும் உதவ வேண்டும் என்பதே மூன்றாவது விதி. இந்த மனப்பான்மையில் நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கான விஷயங்கள் அனைத்தும் கிடைக்கும் என்கிறார் மார்க் மேன்ஷன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் பிறருக்கு தேவையானதைக் கொடுத்தால் உங்களுக்கு தேவையான விஷயங்கள் பிறரிடம் இருந்து கிடைக்கும். இது அன்பு, பணம், பொருள், உறவுகள் அனைத்துக்கும் பொருந்தும்.
இந்த 3 விதிகள் மூலமாக நாம் என்ன தெரிந்து கொள்ளலாம் என்றால், நம் வாழ்க்கைக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, உணர்வுகளை சரியாகப் புரிந்துகொண்டு, அனைவரது வளர்ச்சிக்கும் பாடுபட்டால் வாழ்க்கையை சிறப்பாக வாழலாம்.