இன்றைய காலத்தில் பலரது காலைப் பொழுது மிகவும் மோசமாகவே தொடங்குகிறது. தொடங்குகிறது என்பதை விட, அவர்கள் அப்படி மோசமாகத் தொடங்குகிறார்கள் என்பதுதான் சரியாக இருக்கும். காலை எழுந்த உடனேயே பல விஷயங்களை போட்டு மனதில் நினைத்துக் கொண்டு எதையும் செய்யாமல் வீணடிக்கிறார்கள். ஆனால் நாம் நமது காலைப் பொழுதை சிறப்பாக அமைத்துக் கொள்வது மூலமாகவே வாழ்வில் வெற்றியடைய முடியும். இந்தப் பதிவில் உங்களது காலைப் பொழுதை மோசமாக்கும் 5 விஷயங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
மோசமான சிந்தனைகள்: காலை எழுந்தவுடனேயே அன்றைய நாளில் செய்ய வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் மனதில் போட்டு சிந்தித்துக் கொண்டு அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இது அவர்களது பொன்னான நேரத்தை வீணடித்து விடுகிறது. வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள், கவலைகள் மற்றும் சவால்கள் போன்ற விஷயங்களை அதிகமாக நினைத்து நேரத்தை வீணடிக்காமல், காலையில் எழுந்ததும் நாம் நம்மை எப்படி சிறப்பாக மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது நல்லது.
காலை உணவைத் தவிர்ப்பது: காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் அறிந்தாலும், ஏதோ ஒரு அவசரத்தில் காலையில் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்து விடுகிறோம். காலை உணவு என்பது உங்கள் வயிற்றை நிரப்புவதற்கு மட்டுமல்ல, ஒரு நாள் முழுவதும் நீங்கள் எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கப் போகிறீர்கள் என்ற அமைப்புக்கு ஊட்டம் கொடுக்கும் ஒன்றாகும். எனவே என்ன ஆனாலும் காலை உணவை மட்டும் தவிர்க்காதீர்கள். அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
முக்கியத்துவம் இல்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிப்பது: உலகெங்கிலும் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களில் 80 சதவீதம் பேர் காலை எழுந்ததும் அவர்களது செல்போனை பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கிறது. காலையில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமல்ல. காலையிலேயே அதிகமாக செல்போன் பயன்படுத்துவது, உங்களது மிக முக்கிய வேலைகளை தள்ளிப்போட செய்துவிடும். எனவே காலையில் எந்த மின்சாதனப் பொருட்களையும் பயன்படுத்தாமல் அந்த நாளைத் தொடங்க முயலங்கள்.
முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது: ஒவ்வொரு நாளும் காலை எழுந்த உடனேயே அன்றைய தினத்தில் மிக முக்கிய வேலை என்ன என்பதை உணர்ந்து அதற்கான செயலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் பலருக்கு இதுபற்றிய கவலை இருப்பதில்லை. மிகவும் கடினமான வேலைகளை காலைப் பொழுதில் செய்து விட்டாலே, அன்றைய தினத்தில் உள்ள சிறு சிறு வேலைகளை எந்த சலனமும் இன்றி செய்துவிடலாம். இப்படி காலையிலேயே சிறப்பாக செயல்பட்டுவிட்டால் அந்த உந்துதல் நாள் முழுவதும் நமக்கு இருக்கும்.
உங்கள் மூளைக்குள் எதை செலுத்துகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எல்லாவிதமாகவும் நமக்கு தகவல்கள் கிடைக்கிறது. ஸ்மார்ட் போனை எடுத்தாலே போதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என எல்லா இடங்களிலும் தேவையில்லாத தகவல்கள் நம் மூளைக்குள் திணிக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற தகவல்கள் நமக்கு முக்கியமானது என்பதை வகைப்பிரித்து அவற்றை மட்டுமே காலை வேளையில் நாம் பார்ப்பது அவசியம். நம் மூளைக்கு கொடுக்கும் சரியான தகவல் மட்டுமே, நமக்கு சிறப்பான சிந்தனைகளை ஏற்படுத்தும். மோசமான தகவல்கள் அன்றைய பொழுதை மோசமாகக் கழிக்கவே வழிவகுக்கும்.