தடை அதை உடை. தட்டிப்பார் முட்டிப்பார் மோதிப்பார் முயன்று பார் திறக்கவில்லை எனில் உடைத்து விடு தடைகளை. கட்டி இழுத்து வந்து விடு வெற்றியை என்பதுதான் நம் வாழ்வில் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
தடைகள் இல்லாத பாதை இந்த மண்ணில் இல்லை. தடைகளால் பிறக்கும் தைரியம் தவத்தால் கூட பிறப்பதில்லை என்று சொல்வார்கள். எனவே தடைகளைக் கண்டு முடங்கி விடாமல், துவண்டு விடாமல் துணிவுடன் தகர்த்தெறிந்து முன்னேறி செல்ல வாழ்வில் வெற்றி நிச்சயம். தடைகளைக் கண்டு தயங்காமல் முன்னேற முயன்றால் யாராலும் நம் வளர்ச்சியை தடுக்க முடியாது.
நாம் பெறும் வெற்றி என்பது உலகமே நமக்கு ஆதரவாக இருக்கும்போது சுலபமாக பெறுவது அல்ல. அனைத்துமே நமக்கு எதிராக செயல்படும்பொழுது தனித்து நின்று போராடி தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெறுவதுதான்.
தடைக் கற்களை படிக்கற்களாக எண்ணி முன்னேறி மாபெரும் சக்தியாக நம்மை யாராலும் நிகராகரிக்க முடியாத இடத்தில் வளர்ந்து நிற்பதுதான் வெற்றி. வாழ்வில் எதிர்ப்படும் சோதனைகளைக் கடந்தால் தான் சாதனைகள் பிறக்கும். சாதிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு நிறைய தடை கற்களை உடைத்து வெளியே வரவேண்டும்.
தடைகளை உடைத்து வெளியே வரும்பொழுது நம்மை காயப்படுத்தியவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. சுதந்திரமாக சிறகை விரித்து பறக்க வாய்ப்பு கிடைத்ததே என்றெண்ணி மகிழ்ச்சியுடன் முன்னேற பார்க்க வேண்டும். தடைகளை எதிர்த்து வெளிவரும் சமயம் காதுகளை கெட்டியாக மூடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம் காதில் விழும் வார்த்தைகளால் பலவீனப்பட்டு துவண்டுபோய் முன்னேறாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம்.
தடைகளை எதிர்த்து நிற்க இமயமலையும் வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறைபிடிக்கும் என்பார்கள். எனவே தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்ல தயக்கம் வேண்டாம். தடைகளை உடைத்தெறிய ஓயாது முயற்சி செய்து லட்சியத்தை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால் நம் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது.
சோம்பலை விடுத்து, அறியாமையை போக்கி, தடைகளை எதிர்த்து முன்னேற்ற பாதையில் செல்ல செல்ல நம்மால் சரித்திரம் படைக்க முடியும். அப்படி மோதி போராடி, வரும் தோல்வியைக் கண்டு துவளாமல் முன்னேறி சரித்திரம் படைப்பதற்கு வயது ஒரு தடையே அல்ல.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் இருந்து விட்டால் நாம் செல்லும் பாதையில் எவ்வளவு தடைகள் வந்தாலும் முறியடித்து முன்னேறி விடலாம்.
இலக்கில் கவனம் செலுத்தி பயணிக்கும் பொழுது வழியில் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியுங்கள். நம்மைச் சுற்றி எழுப்பப்படும் தடை சுவர்களை உடைத்து வெளியேறி சுதந்திரமாக செயல்பட்டாலே வெற்றி நிச்சயம்.
செய்வோமா?