

மற்றவர்களைப் போலப் பணிபுரிய நம்மால் இயலவில்லையே என்று மனதில் குறைபட்டுக் கொள்வதைவிட நமக்கெனச் சொந்தமாக ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் மேம்பாடு பெற உழைக்கவேண்டும். நாம் நாமாக இருக்கவேண்டுமே தவிர, எதற்காக மற்றவர்களாக ஆகவேண்டும்?
வாழ்க்கையில் மேம்பாடு அடைந்த மேதைகள், அறிஞர்கள் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால்,சின்ன வயதில் அவர்களில் பலர் தன்னம்பிக்கை அற்றவர்களாக, தாழ்வு மனப்பான்மையுடையவர்களாக இருந்து பிறகு தங்களைத் திருத்திக் கொண்டவர்களாகவே இருப்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். இந்த உண்மைகளை எல்லாம் மனத்தில் நிறுத்தினால் நாம் தாழ்வு மனப்பான்மைக்கு இலக்காகி இருந்தால் பிறருடைய உதவியின்றி நமது குறைகளை அகற்றிக்கொள்ள முடியும்.
உழைப்பு என்று சொன்னாலே, ஆழ்ந்த நம்பிக்கைதான் அதன் ஜீவநாடியாக இருக்கவேண்டும். மனவலிமையுடன் கூடிய உழைப்பின் மூலம் மனிதன் சாதிக்க முடியாத காரியம் இல்லை. பூமண்டலத்து மனிதன் சந்திர மண்டலத்தைப் பற்றிப் பிரமிப்புடன் கனவுகள் கண்ட காலம் ஒன்று இருந்தது. இன்றோ சந்திர மண்டலப் பயணம் என்பது சாமானியமாக ஆகிவிட்டது.
இந்த அற்புதமான சாதனைக்கு மனிதனுடைய உழைப்புத்தான் முக்கிய காரணம் என்று சொல்வதைவிட, அவனுடைய அசைக்க முடியாத மனவலிமைக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லவேண்டும்.
நாளை மனிதன் எல்லா வான் கோள்களுக்கும் சுற்றுப்பயணம் செய்வது சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாகி விடக்கூடும். இதெல்லாம் மனிதனின் மனஉறுதி கலந்த உழைப்பின் சாதனைகள் அல்லவா.
எந்த அளவுக்கு மனத்தில் தன்னம்பிக்கை தேங்குகிறதோ அந்த அளவுக்கு மனம் எஃகு போன்ற உறுதியினைப் பெறும். ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது ஒரு திறமை அமைந்தே இருக்கும். அந்தத் திறமையினை நாமாக உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கடுமையாக உழைக்கும்போது, நமது திறமை தீட்டப்பட்ட கத்தி போன்று கூர்மையடையும்.
திட்டமிட்ட முயற்சியும், கடுமையான உழைப்பும் சேர்ந்தால் திறமை பெரிய முயற்சி இல்லாமலேயே பிரகாசிக்கக்கூடும்.ஆகவே திறமைக் குறைவை ஒரு பெரிய காரணமாக வைத்துக்கொண்டு மனம் குமையத்தேவையில்லை.
நமக்கென ஏதாவது துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அந்தத் துறையில் தொடர்ந்து கடுமையாக உழைத்து வந்தால் ஒரு திறமையும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருப்போரும் நல்ல திறமைசாலிகளாகத் திகழ்வார்கள்.
திறமைக் குறைவாக இருப்பதாகத் தெரிந்தால் திறமையை வளர்த்துக்கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வதுதான் முறையே தவிர, மனத்தை எதற்காகவும், பலவீனப்படுத்தித் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. மற்றவர்களைப்போல் நாமும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்காக நேரத்தையும் காலத்தையும் வீணடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நாம் நாமாகவே இருப்போம் நமக்கென்று இலட்சியங்களை ஏற்படுத்திக் கொண்டு உழைப்போம். நிச்சயம் உயர்வோம் என்று உறுதிகொள்வோம்.