-பி.ஆர்.லட்சுமி
மயக்கமா! கலக்கமா! மனதிலே குழப்பமா…. என்ற ஒரு பழைய அருமையான திரைப்பட பாடல் எல்லோரும் கேட்டதுண்டு. கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல் தான் இது! நம் கவலைகள் தீர மருந்தாக ஒரு வரி சொல்லி இருப்பார். உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி; நினைத்துப் பார்த்து நீ நிம்மதி நாடு!
கவலைகள் இல்லாத மனிதர்கள் உண்டோ இவ்வுலகில்?
டாஸ்மாக் செல்லும் குடிகாரர்கள்கூட நாங்கள் கவலையை மறக்கத்தான் குடிக்கிறோம் என்று கூறுகிறார்கள்…. அப்படி என்றால் ஒரு நாள் குடித்தால் போதுமே…… கவலை மறைந்து விடுமே! ஏன் தினசரி குடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா!
தினம் தினம் வாழ்க்கையில் நாம் பலவித பிரச்சனைகளை எதிர்நோக்கி கொண்டே இருக்கிறோம். அவற்றிற்கு நாம் தீர்வுகளை தேடுகிறோமா…… அதைத்தான் நாம் இங்கே எண்ணி பார்க்க வேண்டும். கவலை என்பது என்ன?
நம்முடைய மனோபாவம் ஏதாவது ஒன்றை நினைத்து அதை எதிர்கொள்வது எப்படி என்று யோசித்துக்கொண்டே இருப்பது தான் கவலை.
கவலை தீர்க்க நாம் பெரியவர்களிடமோ நண்பர் களிடமோ அதற்குரிய தீர்வுகளை கண்டறிந்து செயல்பட்டால் நாம் எந்த நேரமும் சிரித்தே வாழலாமே!
மாணவர்களாக இருந்தால் ஆசிரியர்களிடமோ, நண்பர்களிடமோ உறவினர்களிடமோ கேட்கலாம். வயதானவர்கள் இருந்தால் நமக்கு உற்ற துணை குழந்தைகளிடமும் அல்லது அக்கம்பக்கத்தாரிடமோ கேட்கலாம்.
கடவுளிடம் கேட்கலாம்….. ஆனால் கடவுள் பதில் சொல்வாரா என்று நாம் யோசிக்க வேண்டும் இல்லையா…… பெரியவர் பலர் சொல்வதுண்டு. நான் எனது கவலைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். அவர் எனக்குத் தீர்வு சொல்வார் என்று!
பெரும்பாலான கவலைகள் பலவிதங்களில் பணத்தைச் சுற்றி இருக்கின்றன. நாம் யோசித்துப் பார்த்தால், பணம் சம்பாதிப்பது மட்டும்தான் வாழ்க்கையா என்ன?
அதையும் தாண்டி நிம்மதியாக வாழ ஓரிரு மணித் துளிகளை நாம் நமக்கென்று ஒதுக்கலாமே! இசை, ஓவியம், எழுதுவது, தோட்டவேலை என ஆயகலைகள் அறுபத்துநான்கில் ஒருசிலவற்றுக்கு நம் வாழ்க்கையில் நேரம் ஒதுக்கிக் கொள்ளலாமே!! அதை நாம் சரியான விதத்தில் வெளிப்படுத்தி காட்டலாமே!
கவலை உள்ளபோது எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்கிறீர்களா? கவலை என்று நாம் நினைத்தால்தானே அது நமக்கு ஒரு சிக்கலாகத் தெரியும். இது என்னால் தீர்க்க முடியும். இதை நான் எதிர்நோக்கி ஜெயிப்பேன் என்ற மனவலிமையை நமக்குள் வளர்த்துக்கொண்டால் எல்லா நாளும் மகிழ்ச்சியான நாள்தானே!