கூடி வாழ்ந்தால் கோடி நன்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான். நான் முன்னேற வேண்டும். எனக்கு என்னுடையது என்று சுயநலத்தோடு ஒடிச் சென்று தனித்து நிற்பதில்தான் வெற்றி என்று நினைத்து மகிழ்ச்சியைத் தொலைக்கிறோம். மனிதன் கூட்டுக் குடும்பங்களாக சேர்ந்து உண்டு சேர்ந்து பேசி, சேர்ந்து கற்று, சேர்ந்து வேலைசெய்து மகிழ்ந்த காலங்கள் எல்லாம் நம்பர் ஒன் வேட்டையில் நசுக்கிப் போய்விட்டன.
ஒற்றுமையும், ஒருமைப்பாடும், சுயமரியாதை, சுய கௌரவம், என தனித்தனி தீவுகளாக கூறு போடப் பட்டுள்ளன. ஒருவர் தோற்றால் தான் இன்னொருவன் வெற்றிபெற முடியும் என்பது விளையாட்டின் விதியாக இருக்கலாம். பகிர்ந்து உண்பதும் கூடி வாழ்வதும் தான் மகிழ்ச்சியான வாழ்நாளின் விதி.
மேல் நாட்டு பயணி ஒருவர் தென்னாப்பிரிக்கா சென்றபோது பழங்குடிப் சிறுவர்கள் சேர்ந்து இருப்பதைக் கண்டார். அவர்களை தனித்தனியே பிரிக்க எண்ணி அவர்களுக்கிடையே போட்டி வைத்தார். ஒரு கூடையில் சாக்லெட்டுகள், பழங்கள் நிரப்பி தொலைவில் வைத்தார். பிறகு "உங்களில் யார் ஓடிச்சென்று கூடையை நம்பர் ஒன்னாக எடுத்துக் கொண்டு ஓடி வருகிறீர்களோ அவர் அந்த தின்பண்டம் நிரம்பிய கூடையை பரிசாக எடுத்துக் கொள்ளலாம்." என்றார்.
அவர் ஒன்டூ த்ரீ சொல்லியதும் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு ஓடுவார்கள் என்று நினைக்க அந்த சிறுவர்கள் எல்லோரும் கைகோர்த்து கொஞ்சம் கூட பதறி ஒட்டாமல் மெதுவாகச் சென்று கூடையில் இருந்தவற்றை பகிர்ந்து தின்ன ஆரம்பித்தனர். பயணி அவர்களிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்க, அவர்கள் வாழ்க்கையில் நம்முடன் ஒன்றாகப் பயணிப்பவர்கள் தோற்று நம் முன் நிற்க ஒருவன் மட்டும் எப்படி தன் வெற்றியைக் கொண்டாட முடியும்? தான் மட்டும் எப்படி சந்தோஷமாக தலை நிமிர முடியும். வெற்றி ஒருவருக்கு மட்டுமல்ல. அது எல்லோர்க்கும் பொதுவானது." என்றார்களாம்.
நாகரீகத்தில் முன்னேறியவர்கள் என்று கருதப்படும் ஒரு மேல் நாட்டைச் சேர்ந்த பயணிக்கு நாகரீகமற்றவர்கள் என்று கருதப்படும் பழங்குடிச் சிறுவர்கள் எடுத்த வாழ்க்கைப் பாடம் அது.
மேலை நாட்டில் இன்றைய ஆய்வுகள் எல்லாம் ஸ்ட்ரெஸ் நல்லது என்கின்றன. ஏனென்றால் ஸ்ட்ரெஸ் வரும் போது ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கும் இது மற்றவர்களுடன் இயைந்து பழகத் தூண்டும். இதனால் ஸ்ட்ரெஸ் குறையும். ஒற்றுமை கூடும்.
நியூசிலாந்தின் தலைசிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனை நிக்கி ஹாம்ப்ளின் 2016 ரியோவில் சக போட்டியாளரான அமெரிக்க வீராங்கனை காயம்பட்டவுடன் இவர் காட்டிய மனிதாபிமானத்தை யாரும் மறக்க முடியாது. ஒருவர் தன்னுடைய திறமையை வைத்துதான் மட்டுமே முன்னேற நினைப்பதை விட தன்னிடம் இல்லாத மற்றொருவரின் திறமையையும் இணைத்துக் கொண்டு செயல்படும் போது வெற்றி உறுதியாகவும், நிலையாகவும் இருக்கிறது.
வாழ்வின் அன்றாடச் செயல்களில் இயைந்து இருக்க வேண்டிய உணர்வு இன்று நீர்த்துப்போய் பேறிடர்கள் காலங்களில் மட்டும் சட்டென்று வெளிப்படும் இன்ஸ்டன்ட் இரக்கமாகச் சுருங்கிப் போயிருக்கிறது. ஒருங்கிணைந்து வாழும் உன்னத மனிதம், செம்புக்குள் அடைக்கப்பட்ட கங்கையாக மனதிற்குள் மூடிக் கிடக்கிறது அதனைச் சற்றே திறந்து விட்டால் போதும், மடை திறந்த வெள்ளமாய்ப் பரவி உலகை நனைக்கும். அதன் விளைவாக எங்கும் மகிழ்ச்சி பொங்கும்.