-பிருந்தாநடராஜன்
நமது அன்றாட வாழ்க்கையில் சந்தோஷம், துயரம் வெற்றி தோல்வி எதுவும் நிரந்தரமில்லை. தோல்வியை சந்திக்கும்போது கண்டிப்பாக வெற்றி காத்திருக்கிறது என்று நினைத்து இதுவும் கடந்து போகும் என்ற சொல்லை மனதிற்குள் வித்திட்டால் தோல்வியை கடந்து விடலாம்.
துயரம் நேர்ந்தால் மகிழ்ச்சி காத்திருக்கிறது. இத்துயரம் கடந்து போகும் என்ற மன நிலை வந்தால் அத்துயரமும் கடந்து போகும். இது ஒரு நம்பிக்கைதான். தன்னம்பிக்கை தான் இதுவும் கடந்து போகும் என்பதை நினைப்பது. வாழ்க்கையில் முன்னேற தகுதியும் முக்கியம். தன்னம்பிக்கை அதை விட முக்கியம்.
மனது காயப்படும்படி பேசுபவர்களை கடந்து விடுவோம். நம் மனம் காயப்பட்டாலும் அதைக் கடந்து செல்வதே ஆரோக்கியமான மனநிலை.
புத்தரைப் பற்றிய கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது. போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தர் தங்கள் ஊருக்கு போதனை செய்ய வருவதாக கேள்விப்பட்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடினார்களாம். அனைவரும் தங்கள் பிரச்சனைகளை கூறி இதற்கான தீர்வு என்ன என்று கேட்டார்களாம். பொறுமையாகக் கேட்ட பின் புத்தர் சிரித்தபடியே "இதுவும் கடந்து போகும்" என்று சொன்னாராம்.
கூட்டத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவன் புத்தர் கூறிய படி "இதுவும் கடந்து போகும்" என்று சொன்னானாம். சொல்லிப் பார்த்ததில் இந்த நோய் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும். நோய் தீரும் என்ற நம்பிக்கை வந்ததாம்.
பணப் பிரச்சனையில் இருந்தவனுக்கும் "இந்த பிரச்சனை இப்படியே இருக்காது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை வந்ததாம்.
என்றுமே பிரச்சனைகள் நிரந்தரமில்லை. தோல்வியை சந்திப்பவர்கள் மனதில் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் தோல்வியும் கடந்து போய் வெற்றிக்கொடி கட்டுவார்கள்.