
'வாழ்க்கை வாழ்வதற்கே' என்று எவ்வளவுதான் அழுத்திச் சொன்னாலும் சிலர் மறுக்கிறார்கள்; வாழ்க்கை கஷ்டப்படுவதற்கே என்று வாதாடுகிறார்கள். அவர்கள் நாலுபேரைப் பார்த்து நாமும் அதுபோல இல்லையே என்று ஏங்குகிறார்கள். பலருக்கு ஏக்கம் துக்கமாகிவிடுகிறது. சிலருக்கு ஏக்கம் சிந்தனையைத் தூண்டுகிறது.
இருட்டாக இருப்பதால் உன் நிழலைக் கண்டு நீ பயப்படாதே! அது ஒளி இருக்கும் திசையை உனக்கு காட்டும் வழிகாட்டி" என்றார் பைரன்.
சிந்தனை தூண்டப்பட்டவர்கள் பாக்கியசாலிகள், அவர்கள் பின்நாளில் பலசாலிகளாகின்றனர். பலம், நாலுபேரை கவனிக்கச் செய்கிறது; முன்னேற்றத்திற்கான வழியைத் தேடச்சொல்கிறது. அது கடினமான வழியானாலும் அதில் பயணம் செய்யத் தைரியத்தைக் கொடுக்கிறது. நாளடைவில் ஒருவனை அது உயர்ந்த மனிதனாக்கி விடுகிறது.
ஆனால், ஏக்கம் துக்கமானால் அவன் பலவீனன் ஆகிவிடுகிறான். அவன் நாலு பேரைப் பார்த்து பொறாமைப்படுகிறான். முன்னேற்றத்திற்கான வழியைத் தேடுவதை விட்டுவிட்டு, உலகம் சூன்யமாகிவிட்டதாக புலம்புகிறான்.
எல்லாவற்றுக்கும் காரணம் மனம்தான் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மனதை வேலைக்காரனாக நடத்துவதும், அல்லது மனதை எஜமானாக ஏற்றுக்கொள்வதும் நமது கைகளில்தான் இருக்கிறது
மனம், நாம் குனிந்து நின்றால் குட்டப்பார்க்கும்; நிமிர்ந்து நின்றால் காலில் விழுந்து அடிபணியும், விரக்தியும் கவலையும் பயமும் தமது முதுகெலும்பை முறித்து குனிய வைக்கும்போது மனம் நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை ஏவல் செய்து விடுகிறது.
அதே சமயம் நம்பிக்கை, துணிவு, வைராக்கியம் எனும் சாட்டைகளை நம் கையில் எடுத்துவிட்டால், மனம் காலடியில் விழுந்து நாம் சொல்லும் வேலைகளை ஒழுங்காகச் செய்வதாகக் கூறி கதறுகிறது.
மனதை எஜமானாக வைத்துக் கொண்டிருப்பவன் கீழே விழுந்து தாழ்ந்த மனிதனாகி விடுகிறான்.
மனம் சரியாக இருந்தால் மார்க்கம் சரியாக இருக்கும். திட்டம் சரியாக இருந்தால் செயல் சரியாக இருக்கும்.
மனதை அடக்குவது அவ்வளவு எளிதல்ல என்பது முற்றிலும் உண்மைதான். அதனால் மனதை அடக்கவே முடியாது என்பது தவறான கருத்து.
இங்கே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னதை நினைவு படுத்தினால், முடியாது என்பது கிடையாது என்கிற விஷயம் புலனாகும். அவர் சொல்கிறார்-
கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பதுபோல பல திசைகளில் ஓடும் மனதை ஒருமைப்படுத்துவது எளிதல்ல. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிடமுடியும் என்று.
வைராக்கியம் உள்ளவனே பலவான். அவனுக்கு எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை வரும்; மாறாக பயம் வராது.
வைராக்கியமுள்ளவனுக்கு துணைபோகும் மனம் வைராக்கிய மற்றவனுக்கு துணைபோக மறுக்கிறது. காரணம் நம்பிக்கை உள்ளவனை முன்னுக்கு தள்ளும் மனம், நம்பிக்கை அற்றவனை பின்னுக்கு இழுக்கும். நம்பிக்கை உள்ளவனைப் பார்த்து மனம் சரணடைகிறது.
ஒளிவெள்ளம் பாய்ந்து வரும்போது எப்படி இருள் பயந்து ஓடி இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடுகிறதோ அதுபோல் நம்பிக்கை நம்முன் தலைதூக்குகிறபோது பயம் தலை தெறிக்க ஓடிவிடும். திரிக்கு நெருப்பு வைத்தால் ஒளி பரவி இருளை விரட்டும்; சிந்தனையை தூண்டிவிட்டால் நம்பிக்கை வீறுகொண்டு எழுந்து பயத்தை துரத்தி அடிக்கும்.
வெற்றி, தோல்வியை நிச்சயிப்பது நாம்தான். நம் வாழ்வை பாலைவனம் ஆக்குவதும் மலர்ச் சோலையாக ஆக்குவதும் நமது கைகளிலேயே கொடுக்கப் பட்டிருக்கிறது.