

இந்த உலகத்தில் ஒவ்வொரு வருடமும் இலட்சக் கணக்கான ஏழைகள் தங்களைப் பணக்காரர்களாக உயர்த்திக்கொண்டு வருகிறார்கள் என்பது உண்மை. இந்த உண்மையை நாம் ஒரு சிறிய கிராமத்தில் கூடக் காணமுடியும். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் ஏழைகளாக வாழ்ந்து வருவதும் உண்மை. இப்படி அவலமாக வாழ்ந்து வருபவர்கள் ஆர்வம் இல்லாதவர்களாகவும், சோம்பேறிகளாகவும்தான் இருப்பார்கள்.
இப்போது ஏழைக் குடும்பங்களில் பிறந்து தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் பலரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ரஷ்ய நாட்டில் முடியாட்சி நடந்து கொண்டிருக்கும்போது அங்கு ஏழ்மையால் அவதிப்பட்டு வரும் ஒரு யூதர் குடும்பத்தில் கோல்டா மெய்ர் என்பவர் பிறந்தார். அவருடைய குடும்பம் ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கி நிறையத் துன்பங்களைக் கண்டு வந்தது.
'பாலஸ்தீனத்தில் யூதர்களுக்காக ஒரு தனிநாடு எதிர்காலத்தில் உருவாகப்போகிறது. அதற்கு உன் உதவி தேவைப்படுகிறது" என்று அவரை யூதர்கள் கேட்டுக் கொண்டதாக அவர் ஒருநாள் கனவு கண்டார். அவர் 1921-ஆம் ஆண்டில் தன் கணவன், குழந்தைகளுடன் பாலஸ்தீனிய நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவருக்குப் பாலஸ்தீன நாட்டில் மிகவும் சாதாரணமான வேலைதான் கிடைத்தது. தன் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டுவதற்காக அவர் அந்தப் பள்ளி விடுதியில் தங்கியிருக்கும் குழந்தைகளின் உடைகளைத் துவைத்துச் சலவை செய்து கொடுத்து வந்தார்.
யூதர்களுக்காகத் தனிநாடு ஒன்றை அமைப்பதற்காக நடந்து வரும் சண்டையிலும் அரசியலிலும் பங்குபெற கோல்டா மெய்ர் விரும்பினார். அவருடைய எண்பது வயது நிறைந்த கணவர் அதற்கு அனுமதி தர மறுத்தார். அவர் தைரியமாக மண வாழ்க்கையைத் துறந்துவிட்டு அரசியலில் தீவிரமாக இறங்கினார்.
அவருடைய தாயும் சகோதரர்களும் கணவனைக் கைவிட்டுவிட்டு அரசியலில் பங்கு கொண்டதற்காக அவரைக் குறை கூறி அவமதித்து வந்தனர். அவர் சிறிதுகூடக் கவலைப்படாமலும் மனம் தளராமலும் 'யூதர்களுக்காகத் தனிநாடு அமைத்தே தீருவது என் தன் இலட்சியத்தை அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.
அவருடைய நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, அயராத உழைப் போன்றவை முடிவில் அவருக்கு மங்காத புகழைத் தேடிக் கொடுத்தன. அவருடைய எழுபதாவது வயதில் அவர் இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "நவீன இஸ்ரேல் நாட்டின் தாய் என்று மக்களால் அவர் கெளரவிக்கப்பட்டார்.
டெர்ரென்ஸ் என்பவர் அடிமையாக இருந்தவர். கால்களிலும், கைகளிலும் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கார்த்தேஜ் என்னும் இடத்திலிருந்து ரோம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு விலங்கினத்தைப் போன்று உழைக்க வேண்டியிருந்தது.
ஆனால் அவர் பிற்காலத்தில் சிறந்த நூல்கள் பல எழுதிப் புகழ் பெற்றார். அடிமையாக வாழ்க்கையைத் துவங்கிய அவர், மக்கள் மதித்துப் போற்றும் அளவுக்குத் தன்னை உயர்த்திக்கொண்டார்.
மா-சே-துங் சீனநாட்டில் ஒரு ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தார். உள்நாட்டுப் புரட்சியில் பங்கெடுத்துக் கொண்டதற்காக அவருடைய சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். மா-சே-துங் விவசாயிகளைத் திரட்டிக் கொரில்லா போரின் மூலம் நாட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றிச் சீனநாட்டில் கம்யூனிஸ்ட் அரசாட்சியை உருவாக்கினார்.
எகிப்து நாட்டில் தபால் துறையில் குமாஸ்தாவாகச் சாதாரண வேலை செய்து வந்த ஒருவருக்கு நாஸர் மகனாகப் பிறந்தார். எகிப்து நாட்டில் இருந்த சூயெஸ் கால்வாய் இங்கிலாந்து நாட்டின் வசம் இருந்து வந்தது. இவர் கால்வாயை வெள்ளையர்களிடமிருந்து விடுவித்தார். உலக நாடுகளிடையே தன் நாட்டின் பெருமையை உயர்த்தித் தன்நாட்டு மக்கள் மதித்து வணங்கும் மாபெரும் தலைவராகத் தன்னை உயர்த்திக்கொண்டார்.
வறுமையில் இருந்தாலும் தன்னுடைய லட்சிய பாதையில் தீராத ஆர்வம் கொண்டு வெற்றி பெற்ற இவர்களை வறுமையில் உள்ளவர்கள் எடுத்துக்காட்டாக கொண்டால் வாழ்வில் விரைவில் முன்னேறலாம்.