
அவர் தனது தொழில் தொடங்கி சுமார் இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. அவரது மூலதனத்துடன் மிக முக்கியமாக கருதியவை கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தரமான பொருட்கள் உற்பத்தி, அனுபவம் மிக்க திறமை சாலிகளின் தயவு (support), வாடிக்கையாளர்ளின் திருப்தி.
அவர் தன்னுடன் பணி புரிப்பவர்களுக்கு சில வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொடுத்து வந்தார். அவற்றில் ஒன்று எப்படி உதவியது என்பதை விளக்கும் நிகழ்வு பற்றி காண்போம்.
இவருடைய நிர்வாகத்தில் வேலை செய்யும் இருவர் வியாபார நிமித்தமாக வேறு ஒரு கம்பெனிக்கு சென்றனர். அந்த கம்பெனியில் இவர்களது வேலை நல்லபடியாக முடிந்தது.
இவர்கள் பணி நிமித்தம் அங்கு சென்றதும் அந்த கம்பெனியில் பணி செய்த ஒரு குறிப்பிட்ட நபரின் சுறு சுறுப்பான வேலை செய்யும் ஸ்டைல் இருவரையும் வெகுவாக கவர்ந்தது.
அந்த நபர் நேர்த்தியாகவும், வேகமாகவும், குறிப்பறிந்து சிறப்பாக உடனுக்கு உடன் கவனம் சிதறாமல் அவரது வேலையை செவ்வனே செய்து இவர்களை அசத்தினார்.
அந்த நபர் விவரம் தெரிந்தவராக காணப்பட்டத்துடன், முன் கூட்டியே திட்டமிட்டு தேவைக்கு ஏற்ப தயார் நிலையில் தயாராக எல்லாவற்றையும் வைத்து இருந்ததால் இவர்கள் சென்ற வேலை தங்கு தடையின்றி விரைவாகவும், போற்றும்படியும் முடிந்தது.
இருவரும் அவரை பற்றி அடிப்படை விவரங்களை பேச்சுவாக்கில் சேகரித்துக் கொண்டனர். பணி நல்ல விதமாக முடிந்ததும் நன்றி கூறி விடைப் பெற்றனர்.
இரண்டு தினங்களுக்கு பிறகு தேனிபோல் வேலை செய்த அவர் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவரை, தன்னை வந்து சந்திக்கும்படி விருப்பம் தெரிவித்து கூறிப்பிடப்பட்டு இருந்தது. அப்படி கடிதம் வந்தது, இரண்டு தினங்களுக்கு முன்பு பணி நி மித்தம் வந்து சந்தித்த இருவரின் முதலாளியிடமிருந்து.
கடிதம் பெற்ற அந்த நபர் அந்த குறிப்பிட்ட முதலாளியை சந்தித்தார். முதலாளி அந்த இருவருடன் இவரிடம் பேசினார்.
இப்படி திறமை கொண்ட அவரை தங்கள் நிறுவனத்தில் தகுந்த வேலையும் அதற்கு ஏற்ப சம்பளம் மற்ற வசதிகள் கொடுத்து பணிக்கு அமர்த்திக்கொண்டார்.
அப்பொழுது வளர்ந்து வந்த அந்த சிறிய நிறுவனம் காலப் போக்கில் ஆலமரம் போல் வளர்ந்து பலருக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் மிகையாகாது.
அன்று அந்த நிறுவனர் தனது நிறுவனத்தில் பணி புரிப்பவர்கள் வெளியில் வேலை நிமித்தம் செல்லும் பொழுது எப்படி அவர்கள் கூர்ந்து கவனித்து தங்கள் நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்ற வியாபார நுணக்கத்தையும் கற்றுக் கொடுத்து அவரது பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பயனும் பெற்றார். அவர்களுக்கும் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளவும், பொறுப்புணர்ச்சி மேம்படுத்தவும் வழிவகுத்தார்.