

பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பது தவறில்லை, ஆனால் நம்முடைய உழைப்பின் மதிப்பைத் தெரியாமல் வளர்ப்பதுதான் மிகப்பெரிய தவறு. பணம், வசதிகளைக் கொடுத்து வளர்ப்பதைவிட, உழைப்பின் அருமை, பொறுப்புணர்வு, பணத்தின் மதிப்பு, கடின உழைப்பின் அவசியம் ஆகியவற்றை அவர்களுக்கு கற்பிப்பது, அவர்களை நல்ல சமூகப் பொறுப்புள்ளவர் களாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்கும்.
ஏன் உழைப்பின் மதிப்பு முக்கியம் தெரியுமா? உழைப்பின் மதிப்பு தெரிந்தால் பொறுப்புணர்வு கூடும். தாங்கள் வாழும் சூழ்நிலையின் கஷ்டங்களை உணரும்பொழுது பொறுப்புணர்வு அதிகமாகும். எதற்கும் அடம் பிடிக்காமல் கிடைத்ததை மதித்து வாழ கற்றுக் கொள்வார்கள். அத்துடன் சொந்த உழைப்பில் வெற்றி பெறுவதன் மூலம் வரும் தன்னம்பிக்கை வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ள உதவும். இதனால் பொறுப்புணர்வு கூடுவதுடன் தன்னம்பிக்கையும் வளரும்.
வறுமை தெரியாமல் வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் உழைப்பின் மதிப்பு தெரியாமல் வளர்வதுதான் தவறு. பணம் எளிதாக கிடைப்பதில்லை என்பதை உணரும் பொழுது, பொருட்களை வீணாக்காமல், பிறரின் உழைப்பை மதிக்க கற்றுக்கொள்வார்கள். ஆடம்பரத்தை விட அத்தியாவசிய தேவைகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வார்கள். இதனால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும்.
வசதிகளைக் கொடுத்து வளர்ப்பது தவறல்ல; ஆனால் அந்த வசதிகளின் பின்னணியில் உள்ள உழைப்பையும், கடின உழைப்பின் தேவையையும் உணர்த்தாமல் வளர்ப்பதே தவறு. இது குழந்தைகளுக்கு பெரிய பின்னடைவைத் தரும். எல்லா நேரங்களிலும் அவர்கள் கேட்பதை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில நேரங்களில் இல்லை என்று சொல்வதன் மூலம், தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தலாம்.
நம்முடைய உழைப்பு, அன்றாடப் போராட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி அவர்களுடன் மனம் திறந்து பேசலாம். பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு இதை வாங்கித் தருகிறார்கள் என்று புரிய வைக்கலாம். அத்துடன் நாமே பொறுப்புடன் செயல்பட்டு, பணத்தை வீணாக்காமல் சேமித்து வாழும் பழக்கத்தை பிள்ளைகளுக்கு முன்னோடியாக இருந்து காட்டலாம்.
உழைப்பின் மதிப்பை உணர்த்தும் வகையில் அவர்களுடன் சேர்ந்து செயலாற்றலாம். இது அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள உதவும். அத்துடன் உழைப்பை மதிக்க கற்றுக்கொடுப்பது சமூகத்தில் நம் பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளரஉதவும்.
நம் பிள்ளைகளுக்கு உழைப்பின் அருமை தெரிந்து வளர்ப்போமா நண்பர்களே!