
சில சமயம் நம்முடைய வாழ்க்கையில், மற்றவர்கள் நம் மீது புழுதியை வாரி இறைப்பதுண்டு. அதிலிருந்து நாம் மீண்டு வருவதற்கான ஒரே வழி அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு மேலே வருவது தான். இதை சரியாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு சலவைத் தொழிலாளியிடம் இருந்த கழுதைக்கு வயதாகிவிட்டதால், அது பொதி சுமக்க சிரமப்பட்டது. இப்படியிருக்கையில், ஒருநாள் அந்த கழுதை அருகில் இருந்த பாழ் அடைந்த கிணற்றிற்குள் விழுந்துவிட்டது.
இதை அறிந்துக் கொண்ட சலவைத் தொழிலாளி அதை காப்பாற்ற முயன்றார். ஆனால், பலமணி நேரம் போராடியும் அவரால் அந்த கழுதையைக் காப்பாற்ற முடியவில்லை. பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
கழுதைக்கு மிகவும் வயதாகிவிட்டதால் இப்போது கழுதையால் சரியாக பொதி சுமக்க முடியவில்லை. கிணற்றையும் மூட வேண்டும் என்று யோசித்து, தன் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். எல்லோரும் சேர்ந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் போட்டனர். அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துக் கொண்ட கழுதை பயங்கரமாக கதறியது.
முதலில் தன் மீது விழும் மண்ணை பார்த்து பயந்தது கழுதை. பின்பு சுதாரித்துக்கொண்டு தன் மீது விழும் மண்ணை சிலிர்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைத்து மேலே வர முயற்சித்தது. மக்கள் அனைவரும் மண்ணை போட்டுக் கொண்டேயிருந்தனர். கழுதையும் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மேலே ஏறிவந்துக் கொண்டேயிருந்தது. இறுதியில் கழுதையும் கிணற்றில் இருந்து வெளியே வந்து மகிழ்ச்சியாக மேலே ஏறி ஓடியது.
இந்த கதையில் இருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், சில சமயங்களில் வாழ்க்கை நம் மீது மண்ணையும், புழுதியையும் வாரி இறைத்தாலும், அந்த கழுதையைப்போல அதை உதறித் தள்ளிவிட்டு மேலே வரக்கற்றுக்கொள்ள வேண்டும். அந்த கழுதை தன்னுடைய விடாமுயற்சியால் தான் உயிர் பிழைத்தது என்பதை மறக்க வேண்டாம். இந்தக் கருத்தை தெளிவாகப் புரிந்துக்கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.