

ஒரு சிறுவன் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வானத்தைத் தாங்கிப் பிடிக்கத் தூண்கள் இல்லை. வானம் எந்த சமயத்திலும் கீழே விழலாம் என பயந்தான். காட்டுக்குள் ஓடினான். அங்கு இருந்த மரங்கள் தூணாக இருந்து வானத்தைத் தாங்கிக் கொள்ளும் என்று நம்பினான். அங்கு ஒரு துறவியைச் சந்தித்தான். அவரிடம், "வானத்தைத் தாங்க தூண்கள் இல்லையே. அது கீழே விழுந்துவிடும் என்ற பயமில்லையா?" என்று கேட்டான்.
அதற்கு துறவி, "யார் சொன்னது, அதை தாங்கிப் பிடிக்க தூண்கள் இல்லையேன்னு? அதைக் காண விசேஷமான கண்கள் வேண்டும்" என்றார்.
உடனே சிறுவன், "இத்தகைய கண்களை நான் பெறுவது எப்படி?" என்று கேட்க,
துறவி அவனிடம், "நீ கிராமத்துக்குப் போ..! 'உணவு தரப்போகிறாயா..? இல்லையா..?' என்று கிராமவாசிகளை மிரட்டிக்கேள். கிராமவாசிகள் ஒன்றும் சொல்லாமல் சோறு கொடுத்தால் என்னிடம் வந்து சொல்," என்றார். அப்படியே சென்று கேட்க, எல்லோரும் மறுத்தனர்.
ஒரு பெண் மட்டும் வெளியே வந்து, "குழந்தைக்கு சோறு ஊட்டுகிறேன். சற்றுப் பொறு. தாமதமாவதற்கு மன்னித்துக் கொள்" என்றாள்.
இந்த விஷயத்தை துறவியிடம் சிறுவன் சொன்னான். அவர், "அந்தப் பெண்ணின் நற்செய்கைதான் வானம் கீழே விழாமல் தாங்கிக் கொண்டிருக்கும் பல தூண்களில் ஒன்று" என்றார்.
ஒவ்வொரு நல்ல காரியமும் வானம் கீழே விழாமல் தாங்கிக் கொண்டிருக்கும். தூண் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், தூண் இருக்கிறது. இது போன்ற நம்பிக்கையில் இருந்து வாழ்க்கை அமையுமானால் நீங்கள் அறியாத, உங்கள் கண்ணுக்குப் புலப்படாத இடத்திலிருந்து உங்களுக்கு வலிமை வருகிறது.