மன அழுத்தம் உங்களை வாட்டுகிறதா? இந்த ஒரு 'நகை' உங்களிடம் இல்லாதது தான் காரணம்!

நாம் தரும் சிறிய புன்ன(ந)கை, பல ஆயிரம் மருந்துகளுக்கு இணையான ஆறுதலைத் தரும்.
Power of Smile
Power of SmileImage credit: AI image
Published on

உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், ஒரு தேசத்தின் எல்லையைத் தாண்டி, மொழியின் தடையின்றி, இதயம் தொடும் ஒரே மொழி ‘புன்னகை’ மட்டும்தான். இது உதடுகள் விரியும் ஒரு சிறிய அசைவு மட்டுமல்ல; ஒரு மனிதனின் ஆன்மா இன்னொரு ஆன்மாவோடு பேசும் மௌனமான உரையாடல்.

புன்னகையில் பொதிந்திருக்கும் 'அழகு’ என்பது ஒரு மிகச்சிறந்த கவித்துவமானது. புன்னகை ஆழமான அமைதியையும் அன்பையும் வெளிப்படுத்துவது. 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்றால் அதில் ஆழமான அர்த்தம் பொதிந்திருக்கிறது. ஒருவரின் அகம் அழகாக இருந்தால்தான் முகம் போலித்தனம் இல்லாத புன்னகையை சிந்தும். சிறு குழந்தைகள் குற்றமில்லாத இதயத்தால் புன்னகையைச் சிந்துகின்றன.

சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது முன்பின் தெரியாத ஒருவர் நம்மைப் பார்த்து புன்முறுவல் செய்யும் போது நாமும் புன்னகையைத் தவழ விடுகிறோம். இங்கே அழகு பளிச்சிடுகிறது. புன்னகை நம்மை மிகவும் அழகுபடுத்துவதோடு நாம் எத்தகையவர் என்பதை அடையாளப்படுத்தவும் செய்கிறது. தூய இதயத்தோடு புன்னகை செய்பவர்களுக்கு பொன்னகையே தேவைப்படாது. அழகு நிலையங்களும் தேவையில்லை.

புன்னகையோ, சிரிப்பையோ உருவாக்குவதில் நகைச்சுவைக்கு பெரும் பங்குண்டு. நமது முன்னோர்கள் ‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்றார்கள். 'வயிறு குலுங்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி; வயிறெரிய சிரிப்பவர்கள் மிருகசாதி' என்றொரு பழைய திரைப்படப் பாடல் உண்டு. நாம் உருவாக்கும் சிரிப்பு மற்றவரை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பிறர் மனம் நோகும் படி இருக்கக் கூடாது.

எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் புன்னகைத்தால் அவரால் மறுபுன்னகை செய்யாமல் போக முடியாது.

இதையும் படியுங்கள்:
புறக்கணிப்புகளைப் புன்னகையால் வெல்வது எப்படி?
Power of Smile

எல்லையற்ற மொழி:

நாம் ஒரு புதிய நாட்டிற்கோ அல்லது புதிய மனிதர்களிடமோ செல்லும்போது, நம்மிடம் இருக்கும் முதல் ‘பாஸ்போர்ட்’ புன்னகைதான். ஒருவருக்குத் தெரியாத மொழியில் நீங்கள் பேசினால் அவருக்குப் புரியாது. ஆனால், நீங்கள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தால், “நான் உங்களை மதிக்கிறேன்”, “உங்களை நண்பனாகக் கருதுகிறேன்” என்ற செய்தியை அந்தப் புன்னகை கடத்திவிடும். இதனால்தான் புன்னகையை “உலகளாவிய வரவேற்பு” (Universal Welcome) என்கிறோம்.

அன்பின் அடையாளம்:

புன்னகை என்பது அன்பின் திறவுகோல். ஒரு தாய் தன் குழந்தையைப் பார்த்துப் புன்னகைக்கும்போது, அங்கே வார்த்தைகளுக்கு வேலையில்லை; பாதுகாப்பு உணர்வும் பாசமும் மட்டுமே மிஞ்சும். ஒரு முதியவர் அல்லது ஒரு நோயாளிக்கு நாம் தரும் சிறிய புன்னகை, பல ஆயிரம் மருந்துகளுக்கு இணையான ஆறுதலைத் தரும்.

மௌனமான சமாதானம்:

கோபமான சூழலில் அல்லது ஒரு வாக்குவாதத்தின் நடுவில் சிந்தப்படும் மெல்லிய புன்னகை, பெரிய போர்களைக் கூடத் தவிர்க்கும் வலிமை கொண்டது. “மன்னிக்கவும்” என்று வாயால் சொல்வதை விட, கண்களில் கனிவோடும் இதழில் புன்னகையோடும் ஒருவரைப் பார்ப்பது, காயப்பட்ட மனதை எளிதில் ஆற்றும்.

ஆரோக்கியமும் அழகும்:

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், நாம் புன்னகைக்கும்போது நம் உடலில் எண்டோர்பின்கள் (Endorphins) சுரக்கின்றன. இது மன அழுத்தத்தைக் குறைத்து, முகத்திற்கு ஒரு இயற்கையான பொலிவைத் தருகிறது. பியூட்டி பார்லர்கள் தரும் அழகை விட, ஒருவரின் நிஜமான புன்னகை தரும் அழகுதான் நிரந்தரமானது.

இதையும் படியுங்கள்:
ஏங்க உம்முனு இருக்கீங்க? கொஞ்சம் சிரிங்க...
Power of Smile

புன்னகைக்கத் தெரிந்தவன் ஒருபோதும் தோற்பதில்லை. ஏனெனில் அவன் கவலையை வெல்லும் ஆயுதத்தைக் கையில் வைத்திருக்கிறான். புன்னகைக்கப் பணம் செலவாகாது. அது ஈட்டித் தரும் உறவுகளும் மகிழ்ச்சியும் விலைமதிப்பற்றவை.

“உதடுகள் மூடி இருக்கும்போது உலகம் உங்களைப் பார்க்கும்; ஆனால் உங்கள் இதழ்கள் விரியும்போது உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்.” எனவே, இந்த மொழியில்லாத் தொடர்பை அடிக்கடி பயன்படுத்துவோம்; உலகை இன்னும் அழகாக மாற்றுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com