தொழிலை வளர்ப்பதற்கு சில அடிப்படை குணங்கள் தேவை. பலரும் மேம்போக்காக சிந்திக்கிறார்கள். ஒவ்வொரு தொழிலிலும் தொழில் நுட்பங்கள் உள்ளன. நம் சொந்த அனுபவத்திற்கு ஈடு எதுவும் இல்லை. முட்டாள்கள் அனுபவம் என்ற பள்ளியில்தான் கற்றுக்கொள்கிறார்கள் என்பது பழமொழியாக கூறுவதுண்டு. சில இளைஞர்கள் பயிற்சி முகாம் போய்விட்டு நான் தொழில் தொடங்கப் போகிறேன் என்று துடிப்புடன் கூறுவதுண்டு.
ஒரு ஆடைக்கடை வியாபாரி ஹோட்டல் தொடங்கினார். துணி வியாபாரத்தை நம்பி ஹோட்டல் திறந்தார். அவருக்கு எப்படிப்பட்ட எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்பதிலிருந்து எங்கு புதிய பால் வாங்க வேண்டும் என்பதை அறியாததால் மூன்றே மாதத்தில் நஷ்டப்பட்டு கடையை மூடினார். அவசரப்படுவதில் அர்த்தம் இருக்க வேண்டும். தொழில் என்பது ஒரு கணக்கு. அதில் அனுமானம் வேண்டும். தொழில் நுட்பம் நிர்வாகத் திறமை இருக்கிறதா என்று யோசித்து இறங்க வேண்டியது மிக முக்கியம். நாம் நம் அடிப்படையை வலுவுள்ளதாக அமைக்க வேண்டும். உடனடியாக பணம் பண்ணுவதை விட்டு நிரந்தரமாக நிலைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.
அமெரிக்க நாட்டில் ஒரு சோப்பு கம்பெனி பிரபலமாக இருந்தது. அவர்கள் எதையும் விற்றுவிடுவார்கள். திறமைசாலிகள் என்று எல்லோரும் பாராட்டுவார்கள்.
அந்த நம்பிக்கையில் ஒரு பெரிய சென்ட் கம்பெனியை வாங்கினார்கள். சோப்புபோல் விற்றுவிடலாம் என நினைத்தார்கள். நல்லியில் விற்க வேண்டிய சேலைகளை எப்படி சைனா பஜாரில் விற்க முடியாதோ, அதேபோல் பணக்கார வீட்டுப் பெண்கள் வாங்கும் வாசனைப் பொருட்களை துணிக்கு போடும் சோப் விற்பதுபோல் விற்க முடியாது என்று தெரிந்து கொண்டபோது விளம்பரத்தில் ஏராளமான பணம் செலவாகி இருந்தது.
பழைய விற்பனை முறையை. மாற்றியதால் முன்பு வியாபாரம் செய்திருந்த இடங்களிலிருந்து வருமானம் நினறுவிட்டது. 125 மில்லியன் டாலருக்கு வாங்கிய கம்பெனியை 5 மில்லியன் டாலருக்கு விற்கும்படி ஆனது. இவர்களது தோல்வி பத்திரிகையில் வந்தது.
அனுபவமிக்க கம்பெனியே இப்படிச் செய்தது என்றால் மற்றவர்கள் அனுபவமில்லாத துறைகளில் இறங்குவது ஆபத்து என்று சொல்லவும் வேண்டுமா? பிறரின் அனுபவங்களை எல்லாம் காசு செலவில்லாமல் நீங்கள் கொள்முதல் செய்து சொந்தத் தொழில் தொடங்குங்கள் வெற்றி நிச்சயம்!