ஏமாற்றங்கள் வருத்தங்கள் தரும். ஏமாற்றத்தில் மனம் சோர்ந்து விடும். சிலப்பதிகாரமே ஏமாற்றத்தின் கதைதான். கண்ணகியை விட்டு கோவலன் மாதவியைத் தேடி போகிறான். அவளுடன் பூசலிட்டு பிரிந்து போகிறான். மாதவியும் மணிமேகலையும் துறவறம் பூணும் அளவுக்கு ஏமாற்றப்பட்டனர். கோவலன் புது வாழ்க்கைக்காக கண்ணகி சிலம்பை விற்க முயல கள்வன் பட்டம் சாட்டப்பட்டு மடிகிறான். கண்ணகியின் நம்பிக்கை தகர்ந்தது. இந்த காப்பியம் சொல்லும் பாடம் ஏமாற்றங்ளைக் கண்டு ஓட வேண்டாம் எதிர்கொள்ளுங்கள் என்பதே.
இருட்டுக்கு அப்பால் வெளிச்சம் உள்ளது. அதன் வழி சென்றால் வெற்றி நிச்சயம். கலிங்கப் போரில் அசோக மன்னன் வெற்றி பெற்றான். அவர் அரியணை ஏறிய பிறகு முதலும் கடைசி போரும் இதுதான். வெற்றி பெற்ற அசோகன் ஏராளமான கலிங்க நாட்டு திரவியங்கள், விலையுயர்ந்த அணிகலன்களை மகள் சங்க மித்ரைக்குக் கொடுக்க அவள், "தந்தையே தாங்கள் நாடு பிடிக்கும் ஆசையில் நடத்திய போரில் எவ்வளவு மக்கள் உயிரை இழந்துள்ளனர். எத்தனை லட்சம் பெண்கள் விதவையாகி உள்ளனர். என்னைப் போல் உள்ள பெண்களின் கண்ணீர் ஆறாய் ஓடியதே. இத்தனை லட்சமாக மக்களின் ரத்த வெள்ளத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட பொருள்கள் அல்லவா. அந்த மக்களின் துன்பத்தை நீக்கி இவற்றை அவர்களுக்கே வழங்கி விடுங்கள்" என்றாராம். இனி போரே புரிவதில்லை என்று அசோகன் முடிவெடுத்தான்.
புராணக் கதையில் ஃபீனிக்ஸ் என்ற பறவையை எகிப்தியர்கள் வணங்கி வழிபட்டார்கள். அது 500 ஆண்டுகள் வாழும். அதன் பின் மரக்கிளைகள் தழைகள் கொண்டுவந்து குவித்து அதன்மேல் அமரும். பாடிக் கொண்டே கதிரவனுக்காக காத்திருக்கும். சூரியன் உச்சிக்கு வந்ததும் தழைகளும் கிளைகளும் தீப்பற்றிக் கொள்ளும். அதோடு அந்த பறவையும் எரிந்து சாம்பலாகும்.
அந்த சாம்பலில் இருந்து இன்னொரு பறவை சிறு கருவாக புழுவாக தங்க நிறத்தில் ஒளி வீசியவாறு தோன்றும். புது பிறவி எடுத்து ஃபீனிக்ஸ் மறுபடி 500 ஆண்டுகள் வாழும்.
எனவே ஏமாற்றங்களால் இடிந்து போகாமல் இந்த ஃபீனிக்ஸ் பறவை போல் எழுந்து நிற்போம் எதிர் காலம் வணங்கும் வரவேற்கும்.