

தோல்வி வரலாம் என்று எதிர்பாருங்கள். அப்போது தான் தோல்வி அதிர்ச்சி உங்களைத் தாக்காது (Success Secrets).
தோல்விச் செய்தியை தாங்கும் அளவுக்கு உங்கள் மனதை அமைதியாகவும் , உறுதியாகவும் வைத்திருங்கள். நிதானம் தவறிவிட்டால் தோல்வியை எதிர்க்கும் சக்தி குறைந்து விடும். சக்தி குறைந்து விட்டால் நீங்கள் சரணாகதி தான் ஆக வேண்டும்.
தோல்விக்கான காரணங்களை விருப்பு வெறுப்பின்றி அலசுங்கள். உண்மையான காரணங்களைக் கண்டு பிடித்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். மீண்டும் செயலில் இறங்குங்கள். தேவையான மாற்றங்களையும், வேகத்தையும், அதிக ஆற்றலையும் உங்கள் திட்டங்களிலும், மற்றும் செயல்களிலும் புகுத்துங்கள். புதிய சக்தியோடு, புதிய யுக்தியோடு அதி வேகமாகப் புறப்படுங்கள்.
தோல்வி வரும் போதெல்லாம் துணிவு பிறந்து கொண்டே இருக்க வேண்டும். சக்தி பெருகிக் கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாகத் தோல்வியைக் கண்டால் திகைத்து தேங்கி விடக்கூடாது. துவண்டு விடக் கூடாது. திசை மாறிவிடக் கூடாது. தோல்வியைத் தவிர்க்க முன்யோசனையும் எதிர்த்து வெல்ல உறுதியும் அவசியம்.
விலகி நிற்பவன் வெல்வதில்லை. வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை. நமது உண்மையான பலம் வீழாமல் இருப்பதில் இல்லை.
விழுகின்ற போதெல்லாம் விரைந்து எழுவதில் தான் இருக்கிறது. நாம் எல்லோரும் செயல் வீரர்கள்தான். ஆனால் ஒரு அடிபட்டதும் அங்கேயே அமர்ந்து விடுகின்றவர்களும், நமக்கெல்லாம் இது ஆகாது என்று ஆரம்பத்திலேயே அகன்று விடுகின்றார்கள் தான் நம்மில் மிக மிக அதிகம். விலகாவிட்டாலும் கடைசி வரை தாக்கு பிடிக்கின்றவர்கள் மிகமிக குறைவு.
இந்த இடத்தில் தங்கம் இருக்கிறதென்று தோண்ட ஆரம்பித்தான் ஒருவன். 100 அடி தோண்டி கிடைக்காததால் வெறுத்து விலகி விட்டான். அந்தப் பக்கம் வந்த ஒருவன் ஆர்வத்துடன் தோண்டினான். அடுத்த அடியிலேயே தங்கம் கிடைத்தது. விடாமுயற்சியே வெற்றிக்கான ரகசியம். கடமையை செய் பலனை எதிர்பாராதே என்கிறது கீதை. ஆனால் கடமைக்காக எல்லை அளவு எது என்பதற்கான விளக்கம் காலத்திற்கேற்ப மாறுகிறது.
தேர்தலில் வெல்ல நினைப்பவர்கள் பிரசாரத்தோடு நின்றது ஒருகாலம். ஓட்டுப்பதிவு அன்று வாக்காளர்களுக்கு சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து வருவது ஒரு காலம்.
கூட்டம் கூட்டமாக வந்து ஆட்கள் கள்ள ஓட்டு போட்டது ஒரு காலம். வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை செய்து தனக்குச் சாதகமான அறிவிப்புக்கு வழி வகுப்பது இந்தக் காலம். ஆக கடமை பிரசாரத்தோடு முடிந்தது, பலனை எதிர்பார்ப்போம் என்ற காலம் இப்போது இல்லை.
வேலைக்கு மனு போடுவதும் நேர்முகத் தேர்வை நல்லவிதமாகச் செய்வது முற்காலம். வேலை நியமன உத்தரவு உங்கள் கையில் கிடைக்கும் வரை உங்கள் கடமை முடியவில்லை என்பது இன்றைய நிலைமை. கடமை என்பது கடைசிவரை இருக்கிறது. வெற்றி கிட்டும் வரை விழிகளை மூடாதீர்கள். தீவிர முயற்சி, தொடர்ந்த முயற்சி, விடாமுயற்சி, கடைசி முயற்சி எல்லாம் அடங்கியது தான் செயல்.
செயலுக்கு உற்ற நண்பன் வலிமையான உடல், உத்சாகமான மனம். செயலுக்கு பரம எதிரி சோம்பல், விரக்தியாக நிலைமை, கூச்சம், பயம், குழப்பம். எனவே எப்போதும் செயல் வீரராக இருங்கள் வெற்றி நிச்சயம்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here