எப்போதும் சந்தோசமாக இருப்பவர்களின் 6 ரகசியங்கள்!
சில மனிதர்கள் எப்போதும் சந்தோசமாக மற்றவர்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்தால் நமக்கு அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும். சில சமயம் அவர்களைப் போலவே நாமும் இருக்க வேண்டுமென்று அனைவரிடமும் சிரித்து பேசி சந்தோசமாக இருக்க முயல்வோம். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அமைதியாகி தனிமையில் சோகமாக உட்கார்ந்திருப்போம்.
மீண்டும் அவர்களைப் பார்க்கும்போது இவர்கள் தனிமையில் சோகமாக இருப்பார்களா இல்லை ஏதேனும் ரகசியம் இருக்கிறதா என்று பலவற்றை யோசித்துக் கொண்டிருப்போம். உண்மையில் எப்போதும் சந்தோசமாக இருப்பவர்களுக்கு இயற்கையாகவே சில குணங்கள் இருக்கும். அல்லது அனுபவத்தின் மூலம் அந்த பழக்கம் வந்திருக்கும். அவர்களுடைய சந்தோசத்தின் 6 ரகசியங்கள் என்னவென்று பார்ப்போமா?
1. தன்னை வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார்கள்: நாம் யார் என்பதை எப்போதும் ஆடைகள் மூலமும் பந்தாவான வார்த்தைகள் மூலமும் வெளிப்படுத்திக் கொள்ள ஆசைப்படுவோம். இந்த வெளிக்காட்டிக் கொள்ளும் பழக்கத்தால் நம்மை யாராவது பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடுகிறது. அந்த எதிர்பார்ப்பு தோல்வியில் முடியும் போது நம்முடைய சந்தோசத்தை இழக்கிறோம். ஆகையால் நீங்களும் தான் யார் என்பதையும் எப்பேர்பட்ட ஆள் என்பதையும் வெளியில் காட்டிக்கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
2. குறைவாக பேசுவார்கள்: நாம் அதிகமாக பேசும்போது தேவையான வார்த்தைகளுக்கு மேல் அதிக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அப்போது என்னவாகும்? எதிரே உள்ளவர்கள் அவற்றைக் கவனிக்க மாட்டார்கள். ஆகையால் அவர்களுக்கு நம்மிடம் பேச விருப்பம் இல்லை என்று நாமே எண்ணிக்கொண்டு வருந்துகிறோம். அதேபோல் அந்த அதிக வார்த்தைகளில் உங்களை மீறி கரடு முரடான வார்த்தைகளைக் கூறிவிட்டு, பின் நீங்களே கஷ்டப்படுகிறீர்கள்.
3. தினமும் கற்றுக்கொள்வார்கள்: சந்தோசமாக உள்ளவர்கள் தினமும் புது புது விஷயங்களைத் தெரிந்துக் கொண்டு எதாவது தினமும் கற்றுக்கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் ஒரு திருப்தியும் அறிந்துக்கொண்ட விஷயத்தின் விளைவுகளும் அவர்கள் சந்தோசமாக இருக்கக் காரணமாகிறது. ஆனால் நாம் எந்த வேலைகளும் இல்லையென்றாலும் எதையும் கற்றுக்கொள்ள முன் வருவது கிடையாது. அந்த நேரத்தில் தேவையற்ற சிந்தனைகளில் மூழ்கி எதையாவது நினைத்து வருத்தம் கொள்கிறோம்.
4. மற்றவர்களுக்கு உதவியாக இருப்பார்கள்: மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவியோடு இருப்பார்கள். அதேபோல் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு அவர்களே உதவி செய்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்கள் முகத்தில் சிரிப்பை பார்ப்பது அவர்களுக்கு மன திருப்தியை ஏற்படுத்தி மகிழ்ச்சியாக்கும்.
5. அதிகமாக புன்னகை செய்வார்கள்: உண்மையில் ஆற்றல் என்பது ஒரு தொற்று. ஆகையால் அவர்கள் சிரிக்க ஆரம்பித்து மற்றவர்கள் சிரிக்க காரணமாவார்கள். புன்னகையுடன் வரவேற்பதும் புன்னகையுடன் பழகுவதும் புன்னகையுடன் அனுப்பி வைப்பதும் அவர்களின் குணமாகும்.
6. தேவையற்றதை தவிர்த்துவிடுவார்கள்: அவர்கள் மனதைக் காயப்படுத்தும் விஷயங்களையும் அவர்களுக்கு தேவையில்லாத விஷயங்களையும் தவிர்த்துவிடுவார்கள். அவர்களைப் பற்றி யார் என்ன கூறினாலும் நல்லதை மட்டும் கேட்டுக்கொண்டு மற்றதை அங்கயே விட்டுவிடுவார்கள்.
அவர்களின் இந்த ஆறு குணங்களை நாமும் மனதில் வைத்துக்கொண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.