

"இதுவும் கடந்து போகும்'' என்ற தத்துவத்தை எளிமையாக சொல்லிவிடலாம். ஆனால், வாழ்க்கையில் சில நிமிடங்களை கடப்பது அவ்வளவு சுலபம் அல்ல. எத்தனையோ மகிழ்வான தருணங்கள், சிரிப்புகள், எத்தனையோ துக்கங்கள், கண்ணீர் துளிகள். எத்தனையோ ஏமாற்றங்கள், கோபங்கள். கடந்ததைப்பற்றி வருந்தாதீர்கள்.
வருவதைப் பற்றி கற்பனை செய்யாதீர்கள். நிகழ்வதை திறம்படச் செய்யுங்கள். வாழ்க்கை வேறு எங்கேயும் இல்லை. அது உங்கள் கைகளில்தான் உள்ளது. உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில். எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்.
நேற்று வந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது. இன்று வந்த சோகங்கள் நாளை நம்மை தொடராது, நம்பிக்கை தான் வாழ்க்கை. கவலை என்பது பலூனில் உள்ள காற்றைப்போல. உள்ளே இருக்கும் வரை பெரிதாகத் தெரியும். வெளியே விட்டுவிட்டால் இருந்த இடம் கூடத் தெரியாது. மழைத்துளிகள் வடிவத்திலும் அளவிலும் சிறியதாக இருக்கலாம்.
ஆனால், அவற்றின் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆற்றை நிரப்பிவிடுகின்றன. அதுபோல, சிறிய தொடர்ச்சியான முயற்சிகள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும் என்று நினைப்பவர்களிடம் இருக்க வேண்டிய ஒரு அம்சம் நகைச்சுவை உணர்வு. உங்கள் செயல்களை கண்டு உங்களால் சிரித்துவிட்டு கடந்துபோகும் பக்குவம் உங்களிடம் இருந்தால் உங்களை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் குறைகளை சுட்டிக்காட்ட ஒரு ஆள் உங்கள் அருகில் இருக்க வேண்டும். நீங்கள் பார்க்கும் வேலை முதலில் உங்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். பணத்திற்காக பிடிக்காத வேலையில் உழல்வதுதான் பல பிரச்னைகளுக்கு காரணம்.
சிறு சிறு கற்கள் இணைந்து ஒரு சுவராக மாறி பின்பு வீடாக மாறுவதைப் போலவே, நமது சிறு சிறு முயற்சிகள் இணைந்தே வெற்றியாக மாறி பின்பு சாதனையாக மாற்றம் பெறுகிறது. கடினமான பாதைகள்தான் அழகான இடங்களுக்கு அழைத்துச்செல்கிறது.
எந்த ஒரு கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் நாம் நாமாக இருப்பது மிகவும் அவசியம். நாம் எதிர்கொள்ளும் கடினமான சூழல் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லவே வருகின்றன என்பதை உணரும்போது நம்மில் நிலையான வளர்ச்சி எப்போதும் இருக்கும். தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவிக்கவும் முடியும்.
உங்களுடைய துணிச்சல், உங்களுடைய உழைப்பு இந்த இரண்டையும் பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி. உழைப்பு உண்மையாக இருந்தால் உயர்வு தானே தேடி வரும். ஆழம் குறைவோ அதிகமோ அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே, சோதனைகள் ஒன்றோ பலவோ செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே .பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதுதான் வெற்றிக்கு ஏற்ற வழி.
நேர்மறை எண்ணங்களுக்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும், இடையிலான போராட்டம்தான் வாழ்க்கை. உங்களின் நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது, இன்றைய எண்ணங்களும் செயல்களும்தான். எண்ணமும் செயலும் ஒருசேர ஒரே இலக்கில் வைத்துப் பாருங்கள். உங்களுடைய வளர்ச்சிக்கான எண்ணங்கள் எளிதாக உங்கள் கைவசம் வந்து சேரும்.
உங்கள் எண்ணங்களை, நீங்கள் தொடர்ந்து கவனிக்கவேண்டும். உங்களின் எண்ணங்கள் உங்கள் வசமாகும்போது வெற்றியும் உங்கள் வசமாகும்.ஒரு வட்டம் போட்டு அதற்குள் வாழ நினைப்பது தப்பில்லை ! ஆனால் அந்த வட்டம்தான் வாழ்க்கை என்று முடிப்பதுதான் தவறு.
உங்கள் எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி, அதை நீங்களே உருவாக்குவதுதான். நிலைமை மாறினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற எண்ணத்தை விட்டு விட்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல், இப்போதே மகிழ்ச்சியாக இருந்து பாருங்கள், உங்கள் நிலைமை மாறிவிடும் என்பதே உண்மை. எண்ணத்திற்கு ஏற்ப வசதிகளைப் பெருக்குவதை விட, வசதிகளுக்கேற்ப எண்ணங்களை குறைத்துப் பாருங்கள் வாழ்க்கை சிறக்கும்.