மனதில் உறுதி வேண்டும். இதை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வரத்தான் செய்யும். அதை கையாள்வது பிள்ளைகளுக்கு கடினமாக இருந்தால் பெற்றோர்தான் வழிநடத்த வேண்டும்.
வெற்றியா தோல்வியா இரண்டில் தோல்வி எவருமே விரும்பாத ஒன்று. தோல்வி அடைந்துவிட்டால் அதனால் ஏற்படும் அவமானம் கசப்பு இவை இரண்டும் ஒருவித பய உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. பிள்ளைகள் கல்வி கற்றல் முதல் இந்த பிரச்சினை துவங்குகிறது.
இந்த பாடத்தில் தோல்வி அல்லது மதிப்பெண்கள் குறைவு என்றதும் மனச் சோர்வு அடைந்து விடுகிறார்கள். மன அழுத்தம் வருகிறது. அதிலும் அநேக பெற்றோர்கள் ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்தால் என்ன காரணம் என்று பிள்ளைகளுடன் பேசி தெரிந்து வழி சொல்வதை விட்டு விட்டு எதிர்மறை எண்ணங்களுடன் தான் பிள்ளைகளை அணுகின்றார்கள். அதன் விளைவுதான் மன அழுத்தம்.
மனநல ஆலோசகர் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. மதிப்பெண் குறைவு சில பாடங்களில் தோல்வி அதனால் மன அழுத்தம் என்று தங்கள் பிள்ளையை அழைத்து வந்ததாகவும் பேசிய பிறகுதான் புரிந்தது பிரச்சினை அந்த பிள்ளை சரியாக படிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதன் பின்னால் இருக்கும் பல காரணங்கள். பள்ளியில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சந்திக்கும் பிரச்சினைகள், வெளி வட்டார மக்கள் அக்கம் பக்கம் இருக்கும் மனிதர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் சந்திக்கும் பிரச்சினைகள்… இப்படி பல காரணங்கள்...
கடைசியில் மன நல ஆலோசகர் கூறியது தயவு செய்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் நண்பன் போல அமர்ந்து பேசி பிரச்னைகளை புரிந்து தீர்க்க வேண்டும் என்பதுதான்.
கல்வியில் ஆரம்பித்து காதல் வரை… இப்படி பல தோல்விகள். பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. பெற்றோர்கள் அந்த சுதந்திரத்தை தரவில்லையா தெரியவில்லை.
நண்பனிடம் பகிர்ந்து கொள்பவர்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. தேர்வில், உத்தியோகத்தில் உறவில் தோல்வி வராமல் இருக்காது. எதுவாக இருந்தாலும் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் புரிதலுடன் தோல்வியை எதிர் கொள்ளவும் அதன் குறைகளை களைந்து வெற்றிக்கு வழி காட்டவும் உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் மீண்டும் தவறுகள் நடக்காமல் தவிர்க்க முடியும். பெற்றோர்களை விட பிள்ளைகள் மனதை புரிந்து அறிந்து வழி காட்டி உறுதுணையாக இருக்க வேறு யாருமில்லை. பெற்றோர்கள் பிள்ளைகள் இருதரப்பினரும் இதை புரிந்து கொண்டால் பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.