அந்தக் காலத்தில் ஒரு பழமொழி உண்டு "உன் நண்பன் யாரென்று சொல். உன்னைப் பற்றி நான் சொல்கிறேன்’’ இந்த நவீன காலத்தில் ஒருவரைப் பற்றி அறியவேண்டும் எனில் அவர் பெயரைத் தட்டினாலே அவரைப்பற்றிய முழு விபரங்களும் இணையதளம் மூலம் நமக்குத் தெரிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
இதுபோன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் ஒரு மாப்பிள்ளை வந்தால் அவர் பழகும் நண்பர்களின் குணம் எப்படி என்றே முதலில் பார்ப்பார்கள். காரணம் நண்பனிடம் எவ்விதக் கெட்ட பழக்கங்களும் இல்லை என உறுதிப்படுத்த. ஏனெனில் நண்பன் நல்லவன் என்றால் மாப்பிள்ளையும் நல்லவர் என்ற முடிவுக்கு வருவார்கள்.
இது ஒரு உதாரணம்தான். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் நம் அருகில் இருப்பவரை பொறுத்துத்தான் அமைகிறது. எந்நேரமும் ஏதோ ஒரு செயலை செய்தவாறு இருக்கும் சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் நாம் இருந்தால் விரைவில் அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அதேபோல் சோம்பலாக உள்ளவர்கள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் நமக்கும் ஒட்டிக் கொள்கிறது. இதுதான் உளவியல் ரீதியான ஓர் உண்மை. காரணம் நம் மூளை எதன் அருகில் இருக்கிறதோ அதற்கு அடிமை ஆகிவிடும்.
இரவொன்றில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று நின்றது. ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தவர் தூங்கி வழிந்து கொண்டு இருந்ததைப் பார்த்த ஓட்டுநர் அவரை தட்டி எழுப்பி "ஐயா கொஞ்சம் பின்னால் சென்று உறங்குங்கள். நீங்கள் உறங்குவதைக் கண்டால் எனக்கும் உறக்கம் வருகிறது”என்றார். உறங்கி கொண்டிருந்தவர் வெட்கத்துடன் எழுந்து பின்னால் சென்று அமர்ந்து கொண்டு உறக்கத்தை தொடர ஆரம்பித்தார். ஓட்டுநர் அருகில் இப்போது ஒரு சுறுசுறுப்பான இளைஞர் பேசியபடி வந்தார். இருவரும் அதே உற்சாகத்துடன் சேர வேண்டிய இடத்துக்கு பாதுகாப்பாக சென்றனர்.
எனவே வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் நமது அருகில் இருப்பது யார் என்பதை சிந்திக்க வேண்டும். யார் நம்முடன் அதிக நேரம் உடன் உள்ளனர், அவர் உற்சாகமானவரா, சுறுசுறுப்பானவரா, நம்பிக்கையானவரா, நேர்மறை எண்ணம் உள்ளவரா என்று ஆராய வேண்டும்.
தவறு செய்தால் அதை எடுத்துச் சொல்லி நேர் வழி திருப்பும் நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். அரசனாகவே இருந்தாலும் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்து தோல்வியைத் தழுவிய கதைகள் ஏராளம் அறிவோம்.
குறிக்கோள் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் கொண்ட குறிக்கோளை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களை கண்டறிந்து அவர்களுடன் நட்பு பாராட்ட வேண்டும். நமது இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அவர்கள்தான் உதவியாக இருப்பார்கள். குறிக்கோளை அடைய பாடுபடும் போது நம்மை உற்சாகப்படுத்தி மகிழ்வார்கள். ஏனெனில் அவர்களும் வெற்றியாளர் அல்லவா?
அதேபோல் இதையும் கவனிக்கவும். நம் அருகில் உள்ளவர்களால் நாம் எப்படி உற்சாகம் பெறுகின்றமோ, அதைப் போலவே நம்மை பார்த்து மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். நம் செயல்பாடுகள் மற்றும் உற்சாகத்தால் அருகில் இருக்கும் அனைவரும் தன்னம்பிக்கை பெற்றால் நம் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.
எனவே நமக்கும் நம் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே நம் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது என்பதை கவனத்தில் வைத்து நட்புகளை தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம்.