கடினமாக வேலை பார்த்துக் குறைந்த கூலி வாங்கும் இளைஞனுக்கு ஒரு உள்ளக் குமுறல் இருக்கும். தொழில் தொடங்கினாலும், வியாபாரம் செய்தாலும், வேலைக்குப் போனாலும் பணம் வருவதில் வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையைத் தொடங்கும்போது நாம் எதிர்பார்க்கும் ஊதியம் கிடைக்கவில்லையே என்று சலிப்பும் வேதனையும் அடைவதோ அடிக்க்டி தொழிலைமாற்றுவதோ அறிவுடைமை ஆகாது. காலம் வரும் பொறுமையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலுக்கும் மூன்று காலக்கட்டங்கள் உள்ளன.
முதல் காலம்
உழைப்புக்குத் துளியும் பொருந்தாத மிகக் குறைவான ஊதியம் பெறுதல்.
இரண்டாம் காலம்
அளவான உழைப்பு.அளவான சம்பளம்.உழைப்பும் ஊதியமும் சமமாக இருத்தல்.
மூன்றாம் காலம்
மிகக் குறைந்த உழைப்பு. பல மடங்கு ஊதியம்.
இந்த மூன்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வாழ்க்கையும் வரவும் செலவும் சரியாகவே இருக்கும். ஆனால் அந்தக் காலம் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் வீடு வீடாகப்போய் தவணை முறை விற்பனையைத் துவங்கிய சாதாரண வியாபாரிகள்தான் பெரும்புகழ் பெற்ற விஜிபி சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரர்கள். இன்றைய பிரம்மாண்ட ஜவுளி அதிபர்கள் ஒரு காலத்தில் ஜவுளியை மூட்டையாய் சுமந்து ஊர் ஊராய் விற்றவர்கள். வாழ்க்கையின் தொடக்கத்தில் உழைப்புக்கும் ஊதியத்துக்கும். பொருத்தம் இராது. முடிவில் ஊதியத்துக்கும் உழைப்பிற்கும் பொருத்தம் இராது. இதை புரிந்து கொண்டால் உங்களுக்கு வருத்தம் வராது. வியாபாரம் சொந்தத் தொழில் புரிவோர் மற்றும் கலைஞர்களுக்கு இந்த கோட்பாடு வெகுவாகப் பொருந்தும். ஹோட்டலில் டேபிள் க்ளீன் செய்பவர், முதல் ஹோட்டல் தொடங்குவது கஷ்டம். தொடங்கிய பின் அடுத்தடுத்துக் கிளைகள் தொடங்குவது சுலபம். உலகில் செயின் ஹோட்டல்கள் இப்படித்தான் வளர்ந்தன.
ஒரு முதலாளியிடம் வேலை பார்த்தால் உங்கள் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கவில்லையே என்று வருந்த வேண்டாம். நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்திற்கும் முதலாளி தரும் சம்பளத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கணக்கிடுங்கள். அந்தத் தொகையை ஒரு தொழில் கற்றுக்கொள்ள உதவியாக இருந்த முதலாளிக்கு நீங்கள் தரும் சம்பளமாக மகிழ்ச்சியுடன்
கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வாழ்க்கை முன்னேற்றத்தில் இந்த மூன்று காலக்கட்டத்தையும் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.