வாய்ப்புகள் வரும்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

Take advantage of opportunities!
opportunities
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

வாழ்க்கையில் நாம் தேடிச்செல்லும் லட்சியம் பெரியதாக இருக்கலாம். இருப்பினும், அதை நோக்கி செல்லும்போது வழியிலே கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளைக்கூட பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில், வாய்ப்புகள் ஒருமுறை நழுவிச்சென்று விட்டால் திரும்பவும் கிடைக்காது. இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒருநாள் அந்த அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்த கர்வமான சிங்கம் ஒன்று சீக்கிரமே எழுந்து வேட்டைக்கு கிளம்பியது. அந்த சிங்கம் என்ன நினைத்தது என்றால், ‘காட்டிற்கே ராஜாவாக இருக்கும் எனக்கு யானையைப்போல பெரிய விலங்கு கிடைத்தால்தான் சரியாக இருக்கும்’ என்று முடிவு செய்து யானையை காடு முழுவதும் தேடி அலைகிறது.

இப்படி சிங்கம் யானையை தேடிக்கொண்டிருந்த சமயத்தில், அதன் வழியே வந்த சின்ன சின்ன மிருகங்களை அது ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ‘வேட்டையாடினால் யானையை மட்டுமே வேட்டையாட வேண்டும்’ என்ற எண்ணத்தில் சிங்கம் இருந்தது.

இப்படியே நேரம் ஆக பல மணி நேரம் கழித்தும் சிங்கத்திற்கு யானை கிடைக்கவேயில்லை. இப்போது சிங்கத்திற்கு என்ன தோன்றுகிறது என்றால், ‘சரி பசி வேறு அதிகமாகிறது. எனவே, வழியில் மானோ, நரியோ கிடைத்தால் சாப்பிட்டு விடலாம்’ என்று எண்ணுகிறது.

இப்போது நேரம் வெகுவாக ஆனதால், சூரியன் மறைய தொடங்குகிறது. சிங்கத்திற்கு பசியை அடக்கவே முடியவில்லை. 'ஒரு சின்ன முயல் கிடைத்தால் கூட நன்றாக இருக்குமே’ என்று சிங்கம் யோசிக்கிறது. இவ்வாறு சிங்கம் யோசித்துக் கொண்டிருக்க இரவும் வந்துவிட்டது. ஆனால், சிங்கத்திற்கு எந்த இரையுமே அன்று கிடைக்கவில்லை. அப்போதுதான் சிங்கம் உணர்கிறது, ‘காலையிலேயே கிடைத்த சின்ன சின்ன மிருகங்களை தவறவிட்டு விட்டோமே!' என்று நினைத்து மிகவும் வருத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எதிர்மறையான பேச்சுக்களை எப்படி கையாள்வது தெரியுமா?
Take advantage of opportunities!

இந்தக் கதையில் வந்த சிங்கத்தின் மூலமாக என்ன தெரிந்துக் கொள்ளலாம் என்றால், பெரிய கனவுகளை நோக்கி செல்வது தவறில்லை. ஆனால், வழியில் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகள் பயன்படுத்த தவறாதீர்கள். யாருக்கு தெரியும். அந்த சின்ன வாய்ப்புகள் கூட நம்முடைய பெரிய கனவுகளை சுலபமாக அடைவதற்கு நமக்கு வழிவகுக்கலாம். இதை புரிந்துக்கொண்டால் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com