
உழைப்பின் நோக்கமே ஓய்வு என்பார் அரிஸ்டாட்டில். ஓய்வு ஊக்கமுள்ள வேலையிலிருந்து ஓடுவதல்ல அதற்குத் தயார் செய்துகொள்ள புதிய தெம்பையும் புத்துணர்ச்சியையும் பெறுவதற்கே என்பான் பிதாக்கோரன்,
"கனமான சுமைகளைச் சுமப்பவர்களே! உழைப்பாளர்களே! என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு தருகின்றேன்" என்றுதானே நமக்கெல்லாம் அன்போடு அழைப்பு விடுத்தார் விவிலியத்தின் வேதநாயகர்.
ஓய்வு இரண்டு வழிகளில் நமக்குத்தேவை. ஒன்று உடலுக்கு;மற்றொன்று மனத்திற்கு. கடுமையான வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றபோது, உடற்சோர்வை -அயற்ச்சியை போக்க ஓய்வு தேவை. அலுவலக அதிகாரிகள் சிந்தனையாளர்கள் - எழுத்தாளர்கள் மாணவர்கள் போன்றோர்களுக்கு - அவர்களது தொடர் பணி காரணமாக ஒரு நிலையில் தளர்ச்சி வரலாம்.
சிந்திக்கின்ற எண்ணத்தில் சிதறல்கள் வரக்கூடும். இந்த நிலையில் மனத்திற்கும் மூளைக்கும் சற்று ஓய்வு கொடுங்கள். உடல் வலிவிழந்து போவதற்கு முக்கியக் காரணமே ஓய்வில்லாத பணி. இதனால் நாம் பல நோய்களுக்குள் தள்ளப்படுகின்றோம். உடற்சோர்வாலும் மனச்சோர்வாலும் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி?
இருபதாம் நூற்றாண்டின் மையத்தில் அமெரிக்கப் பெருநாட்டில் கூடிய உலக மருத்துவ ஆய்வரங்கத்தில் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. "Progressive Relaxation, You must relax" ஒவ்வொருவரும் படித்துணர வேண்டியவை.
மருத்துவப் பயிற்சி வழியில் ஓய்வாக இருப்பது எப்படி என்பதை, பல ஆண்டுகள் ஆய்வு செய்து சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் மன இயல் துறைத் தவைவர் மருத்துவர் எட்மண்ட் ஜேக்கப்சன் தனது புத்தகங்களில் தெளிவாக்கிக் காட்டியுள்ளார். நரம்புத் தளர்ச்சி - இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மூலகாரணமே ஒய்வின்மையே என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்தார்ப் போல் உங்களை வாட்டி எடுக்கின்ற மனக்கவலைக்கு மாற்று வழி ஓய்வு என்கிறார்.
கவலையை சில நிமிடங்களில் மறக்கப்பழகுங்கள். உங்களுக்குப் பிடித்த விளையாட்டோ - படிப்பதோ - இசை சேட்பதோ - வானொலியோ - தொலைக்காட்சியோ போன்ற துறைகளிலே உங்களது எண்ணத்தையும் மனதையும் திருப்பி விடுங்கள் சிலமணித் துளிகள் கடந்து நீங்கள் சமநிலைக்கு வருவீர்கள். உடன் உங்களது மனக்கவலைக்கும் தீர்வு கிடைக்கும். இது பரிசோதித்துப் பார்க்கப்பட்ட உண்மை.
உடல் சோர்வையும் மனச்சோர்வையும் தொடர் கதையாக வளரவிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கின்றார்கள். நோய்கள் சிந்தனைத் தடுமாற்றம், மறதி. மூளைப் பழுதாகி மனநோய்க்கு ஆளாகுதல் போன்ற தடுமாற்றங்கள் தானாக வந்து சேரும் என எச்சரிக்கின்றார்கள்.
நாட்டைப் பாதுகாக்கின்ற இராணுவத்தில் இராணுவ வீரர்கள் போரிடுகின்ற காலத்தைவிட அவர்கள் பெறுகின்ற ஓய்வே அதிகம்.
அமெரிக்க இராணுவத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பத்து நிமிடங்கள் கட்டாய ஓய்வு வழங்கப்பட வேண்டுமென்பது இராணுவ விதி. அப்போதுதான் அவர்கள் எப்போதும் புத்துணர்ச்சியோடு போரிட இயலும்.
ஆகவே சீரான இடைவெளியில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறுங்கள்.