நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் மற்றவர்களுக்கு நேர்ந்திடாத சம்பவங்களும், சிக்கல்களும், தீர்வுகளும் எப்போதும் நடப்பதுண்டு. ஆகவேதான் இத்தகைய புதிய புதிய சம்பவங்களை நாம் சந்திக்கிறபோது நமது வாழ்க்கை விரிவாகிறது. ஆழமாகிறது. மேற்கொண்டு அர்த்தப்படுத்தப்படுகிறது. கற்பிக்கவும், கற்றுக் கொள்ளவும் பாடம் நிறைய கிடைக்கிறது.
வாழ்க்கை சற்று நேரம் எரிந்து விட்டு பின் கரைந்து போகின்ற மெழுகுவர்த்தி அல்ல. மாறாக அது ஒரு அற்புதமான விளக்கு. இந்த விளக்கை அன்பு, நேசம், பகிர்வு, மன்னித்தல், விட்டுக் கொடுத்தல் முதலிய நற்பண்புகளின் மூலம் மற்றவர்களிடம் கொடுத்து விளக்கின் வெளிச்சம் குன்றாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் குன்றாத புகழ் குன்றின் மேலிட்ட விளக்காய் திகழும் என்று கூறியவர்கள் பலர். அது போல் வாழ்ந்து காட்டியவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இன்றும் சிலர் வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அது மட்டும் இன்றி அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு, ரோட்டோரத்தில் இருப்பவர்களுக்கு என்று ஏதாவது தன் கையால் கொடுத்துவிட்டு பிறகு சாப்பிடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி அன்று மற்றவர்களுக்கு கொடுக்க அவர்கள் வீட்டில் எதுவும் இல்லை என்றால், இருக்கின்ற தயிரையாவது பெருக்கி மோர் ஆக்கி மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடுவார். அது அவர்களின் ஈகை குணத்தை காண்பிக்கிறது.
இன்னும் சொல்லப் போனால் 'ஆற்றுதல் 'என்பது ஒன்றை அலந்தவர்க்கு உதவுதல்! என்கிறது கலித்தொகை பாடல் ஒன்று.
அப்படி ஈந்து இறவாப் புகழை பெற்றவர் கூறும் நம்பிக்கை நல்வாக்குகளை இதில் காண்போம்!
வள்ளல் ஒருவரை சந்தித்த பெரியவர் ஒருவர், "வருபவருக்கு எல்லாம் வாரி வாரி வழங்குகிறீர்கள், இருந்தும் உங்கள் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கிறதே தவிர குறையவே இல்லையே இது எப்படி?" என்று கேட்டார்.
அதற்கு "வருகிறவர்களுக்கு எல்லாம் என் கைகளால் பொருள்களை எடுத்து அன்புடன் தருகிறேன். நான் ஒவ்வொரு முறை அப்படி தரும் போதும் கடவுள் தன் கைகளால் பொருட்களை எடுத்து என் வீட்டுக்குள் போடுகிறார் .என் கைகளை விடக் கடவுளின் கைகள் பெரியது. அதனால்தான் என் செல்வம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகிறது என்று நான் நம்புகிறேன்" என்று விளக்கம் தந்தார் வள்ளல்.
வாழ்க்கை நமக்கு கிடைத்துள்ள அற்புதமான கொடை. அது இறைவன் தந்த வரம். எனவே உங்களிடம் உள்ள செல்வத்தை இல்லாதோருக்கு வழங்குங்கள். உங்கள் செல்வம் பெருகும்.
வள்ளுவன் மருந்து மரத்தை உதவுவதற்கு உவமையாக்குகிறான். மருந்து மரத்தின் அனைத்து உறுப்புகளும் பயன்படுத்துவது போல, உங்கள் வாழ்வில் அனைத்து நாட்களும் பிறர்க்கு ஈந்து இறவாப் புகழை பெறுங்கள்.