நீங்கள் சுய முன்னேற்றம் மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களை விரும்பிப் படிக்கும் நபராக இருந்தால், மார்க் மேன்ஷனின் “The subtle art of not giving a f*CK” என்ற புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கை மீதான தேவையில்லாத அழுத்தத்தை முற்றிலுமாக நீக்கி மனதை லேசாக்கிவிடும். இந்த புத்தகம் உங்களை வாழ்க்கையில் சிறப்பான விஷயங்களை செய்வதற்குத் தூண்டது. அதற்கு மாறாக, வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு வாழ்வதன் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுக்கும்.
இந்த புத்தகத்தின் மையக் கருத்தில் மிகவும் முக்கியமானது, நமது வாழ்க்கைக்கான முழு பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். தேவையில்லாமல் நமது பிரச்சினைகளுக்கு பிற விஷயங்களை காரணம் காட்டி, நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ்வதை இந்த புத்தகம் பரிந்துரைக்கிறது. நம்மால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி, வாழ்க்கையை நமக்கு பிடித்தபடி வாழும்போது வாழ்வில் நேர்மறையான மாற்றம் உண்டாகும் என சொல்லப்படுகிறது.
அதேபோல மற்றொரு கருத்தாக நமது குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு, தோல்வியை ஒப்புக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதையும் எழுத்தாளர் மிகச் சிறப்பாக இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வுலகம் வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடுகிறது. ஆனால் அனைவராலும் வெற்றியாளர்களாக இருப்பது மிகவும் கடினம். எனவே நமது குறைகளை ஏற்றுக்கொண்டு, அடையும் தோல்விகளில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்வது மூலமாக வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை நாம் அடைய முடியும்.
எதையும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு மிகப்பெரிய கலை. தேவையில்லாமல் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி, உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாதீர்கள். யாரையும், எதையும் கண்டு கொள்ளாமல் உங்களுக்கு பிடித்த விஷயங்களை தைரியமாகச் செய்யுங்கள். மேலும் எல்லாவற்றிற்கும் எல்லைகளை அமைத்து நடந்துகொள்வது உங்களுக்கான மதிப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறது. பிடிக்காத விஷயங்களுக்கு தைரியமாக No சொல்வது தவறில்லை என்கிறார் இப்புத்தகத்தின் ஆத்தர்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே வேண்டும் என இருக்கும் நமது கலாச்சாரத்தில், அதைவிட வாழ்க்கைப் பயணத்தில் அர்த்தத்தைக் கண்டறிவதே சிறப்பு என இப்புத்தகம் நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்தால் உங்களது மனது லேசாகிவிடும். வெளியே சென்று இயற்கையை ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். வாழ்க்கையில் எதுவும் பெரிதாகத் தெரியாது. உங்களது மனதை உருத்திக் கொண்டிருக்கும் கஷ்டமான விஷயங்களும் சாதாரணமாகத் தோன்ற ஆரம்பித்து விடும்.
எனது வாழ்வில் ஒரு மிகப்பெரிய மனமாற்றத்தை இப்புத்தகம் ஏற்படுத்தியது எனலாம். எனவே நீங்களும் மறவாமல் இந்த புத்தகத்தை வாங்கிப் படித்து பயன்பெறுங்கள்.