சிலர் என்னால். முடியுமா? எனக்கு படிப்பில்லையே. எனக்கு சாமர்த்தியம் இல்லையே என்று தங்களைப் பற்றி நினைத்துக் கொள்கிறார்கள். சாமர்த்தியம், புத்திசாலித்தனம், திறமை, வியூகம் என்று எதை எடுத்துக்கொண்டாலும் சரி எதுவுமே கற்றுக் கொள்ளக் கூடியதுதான்.
சிலருக்கு இயல்பாக சில குணங்கள் திறமைகள் இருக்கும். பலருக்கு அவை இல்லாமலிருக்கலாம். ஆனால் என்றைக்கு நாம் இது என்னிடம் இல்லை. நான் கற்றுக்கொள்ளப் போகிறேன். என்னை மாற்றிக் கொள்ள முடியும் என்று எண்ணுகிறோமோ அன்று நம்மால் சாமர்த்தியத்தையும் புத்திசாலித்தனத்தயும் கற்றுக்கொள்ள முடியும் என்று நாம் நம்மைப் பற்றிய உண்மை நிலையை உணர்கிறோமோ, உணர்ந்து அதிலிருந்து மாறவைண்டும் என ஆசைப்படுகிறோமோ அதுதான் நமது மாற்றங்களுக்கு விதை. வெறும் விதை தண்ணீர் இல்லாமல் கிளம்பாது போல நாம் ஆசைக்கு செயல் வடிவம். என்ற தண்ணீர் கொடுக்க வேண்டும். உழைப்பு இல்லாமல் பலன் ஏதும் கிடைப்பதில்லை. உழைப்பு என்பது ஓடுகிற ஆற்றறைப் போன்றது. உழைப்பவன் முன்னேறுகிறான். உழைக்காத சோம்பேறி தேங்கிய சாக்கடைபோல் ஆகிறான்.
பலருக்கு உழைக்கும் திறமை இருக்கிற அளவுக்கு எதையும் தானாக செய்யும் குணம் இல்லை. குளத்தில் நீந்த ஆசைதான். குளக்கரை முன் போய் நிற்கிறார்களே ஒழிய குளத்தில் இறங்குவதில்லை. மூழ்கி விடுவோமோ என்ற பயம். பயத்தை விடுங்கள். பயம்தான் முன்னேற்றத்தின் எதிரி. நாமாக தண்ணீரில் இறங்கி கை கால்களை உதைத்து அல்லது பயிற்சி உள்ளவர்களிடம் கற்று நீந்தமுயல வேண்டும். குளத்தில் இறங்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. நம்மை நாம்தான் தடுத்து வைத்திருக்கிறோம்.
கொல்லையில் மாமரம் இருக்கிறது. மாங்காய் பறிக்க கல் இருந்தால் அடிக்கலாம். அலகு இருந்தால் பறிக்கலாம். நண்பர்கள் ஒருவர் தோளில் ஒருவராக ஏறி நின்று பறிக்கலாம். மரம் குனிந்து. கிளை வளைந்து மாங்காய் தராது. மயிலே மயிலே என்றால் இறகு போடாது. கடையில்தான் வாங்க வேண்டும். காற்று இல்லை என்றால் என்ன செய்கிறோம். மின் விசிறி பனை விசிறி உபயோகிக்கிறோம். கடற்கரை ஏரிக்கரை போகிறோம். காற்று இல்லை என்று சும்மா இருந்து விடுவதில்லை. வேலை இல்லை. வாய்ப்பு இல்லை என்று பழி போடாதே. வேலையைத் தேடிப்போ. செயல்படு. முன்னேற்றம் உன்னைத் தேடிவரும்.
அவர் ஒரு கிராமத்து ஆள். உயரம் அதிகமில்லை. நிறமும் சுமார்தான் பல வருடங்கள் முன் அமெரிக்காவில் படிக்கச் செல்லும்போது பலர் நகைத்தார்கள் கேலி செய்தார்கள். அவர் அசரவில்லை. அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தது. அங்கு பல பட்டங்கள் பெற்றவர்தான் எம். எஸ். உதயமூர்த்தி அவர்கள். இந்த உலகத்தில் நான் பெரிய ஆள் என்று கற்பனை செய்துகொள். எண்ணிய எண்ணியாங்கு எய்தும் எண்ணியல் திண்ணியர் ஆகப் பெறின்! எனவே எண்ணத்தில் உறுதிகொள். உறுதி கொண்ட நெஞ்சத்துடன் செயல்படு. செய். செய. செய். அதன்பின் முன்னே கேலி செய்தவர்கள் கூட உனக்கு மாலை மரியாதை செய்வார்கள். உங்களால் முடியும். பிறரை சார்ந்திருக்க வேண்டியதில்லை. துணிந்து இறங்குங்கள்.
துணிந்தவனுக்கு வெட்கமில்லை என்பது பழமொழி. துணிந்தவனுக்குத் தோல்வியில்லை என்பது புதுமொழி. இறங்கியவனுக்கு சமுத்திரம் முழங்கால்.