எப்பொழுதுமே எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி பெற்று விட்டால் தான் சந்தோசம் அடைவோம். அப்படி சந்தோசம் அடைவதற்கு நாம் எந்த தொழிலை செய்யப் போகிறோமோ அதில் துணிவுடன் இறங்க வேண்டும். அதற்கு துணையாக இருப்பவர்களையும் நல்லவிதமாக தேர்ந்தெடுத்து, அவர்களிடம் வேலை ஒப்படைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னம்பிக்கை மிக மிக அவசியம். அதனைப் பற்றிய பதிவை இதில் காண்போம்!
எண்ணித் துணிக கருமம்.
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே! என்பவற்றை மனதில் ஆழப் பதிந்துக் கொள்ள வேண்டும். ஆதலால், எந்த வேலையை செய்ய துணிந்தாலும் அதை திட்டமிட்டு தீர்க்கமாக முடிவெடுத்த பின் செய்வதே வெற்றிக்கு முதல் படி. முடிவெடுத்த பின் இதை ஏன் தான் செய்யத் தொடங்கினோமோ என்ற எண்ணம் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
துணைக் கோடல்:
இதனை இதனால் இவன் முடிக்கும்
என்றாய்ந்து அதனை அவன் கண் விடல். என்கிறது குறள்.
எந்த ஒரு தொழிலை தொடங்கும்போதும் அதற்கு உறுதுணையாக ஒரு ஆளை அமர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது அதற்கு தக்கப்படியான ஆளை பார்த்து இவரால் இந்த வேலையை வெற்றிகரமாக செய்ய முடியும் என்று உறுதியான பின் அவரிடம் அந்த வேலையை ஒப்படைத்து விட்டால் வெற்றிக்கனியை பறிப்பது மிக மிக சாத்தியம்.
தன்னம்பிக்கை:
முன்பெல்லாம் பியுசி படித்தவர்களுக்கு பேப்பரில் தான் ரிசல்ட் வரும். அப்பொழுது எனது அக்காவின் நம்பர் எந்த செய்தித்தாளிலும் வரவில்லை. என்றாலும் அவர் நான் நன்றாக தேர்வு எழுதினேன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவேன்; என்று கூறிக்கொண்டு கட்டாயம் மார்க்கு சீட்டில் நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பேன் என்று சாக்லேட் டப்பாவுடன் சென்றார்.
அதேபோல் தேர்ச்சியும் பெற்றார். அது போன்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி ஒரு தன்னம்பிக்கை அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருந்து விட்டால் எந்த தொழிலும் வெற்றிக் கனி நம் கையில்தான்.
இப்ப சொல்லுங்க வெற்றிக்கு இந்த மூன்றும் மிகவும் அவசியம் தானே!