கெட்ட எண்ணம், தீய எண்ணம், தவறான எண்ணம், ஏமாற்றும் குணம் என்ற பலவழிகளில் தவறைத் தெரிந்தே செய்கிறான் மனிதன். தவறை கடவுளே எச்சரித்தால் கூட செய்வான். அதன் விளைவுகளை அனுபவிக்கும்போது, ஐயோ ஆண்டவனே என் கஷ்டத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாயா என அலறுவான். கெட்ட எண்ணம் உள்ளவர்கள் வெவ்வேறு நிலையில் வாழ்வில் இறங்கி அல்லல் படுகிறார்கள். உலக மக்களிடமிருந்து அவமானத்தையும் பெறுகின்றனர்.
அமைதியான பூஞ்சோலை, மணம் கமழும் மலர்கள், பசியைப் போக்க என இயற்கை நமக்கு அள்ளித்தர இருக்கும்போது, முறை கெட்ட காரியம் செய்து கஷ்டப்படுகிறார்கள். வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நேர்மையை கடை பிடிக்கலாம். நியாயமற்ற செயல்களைத் தடுக்கலாம். பயிரை அறுவடை செய்யும்போது அத்துடன் முள் செடியையும் நாம் அறுவடை செய்வதில்லை.
நம் வாழ்வில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் மனிதன் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு என்ற அழகுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைக்குத் கட்டுப்பாடு எல்லைகள். இதன் அடிப்படையில்தான் பிரபஞ்சம் இயங்குகிறது. மனிதனிடமிருந்து ஒரு மனிதன் இயக்கும், செய்யும் தீய செயல் அவனை மட்டுமல்ல.
மொத்த சமுதாயத்தையும் பாதிக்கிறது. இன்று அவனுக்குத் தேவை ஆன்மிகம்தான். இது பிரபஞ்சத்தின் சக்தி. வாழ்வில் நல்லது கெட்டதைக் புரிந்து கொண்டு நல்லதை மட்டுமே செயல்படுவோம். ஆனால் இந்த உலக வாழ்வில் நல்லதையே மனதில் அசை போடுவது, நல்லதை மட்டுமே செயல்படுத்துவது என்ற நலலெண்ணத்துடன் செயல்படுவோமானால் உலக வாழ்வை வெற்றியுடன் நீந்திக் கடந்து விடமுடியும்.
எது நல்லது, எது கெட்டது என்பதை அறிய அரவிந்தர் ஒரு எளிதான வழி சொல்கிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் நாள் என்ன செய்தோம் யாரைச் சந்தித்தோம் அப்படிப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நாம் என்ன செய்தோம்,எப்படிப் பேசினோம், எப்படி நடந்து கொண்டோம் என்று தெளிவாக எழுதினோமானால் எதை செய்திருக்கக்கூடாது, எதைப் பேசியிருக்கக் கூடாது. எப்படி நாம் நடந்து கொண்டிருக்கக் கூடாது என்பது தெளிவாகப் புரியும். இப்படி 30 அல்லது 60 நாட்களில் நாம் செய்து வருவோமானால் எந்த சம்பவங்களில் எந்த நிலையில் நாம் தவறு என்று தெரிந்து கொள்வோம்.
அந்தத் தவறுகளை நாம் மீண்டும் செய்ய மாட்டோம். இதன் மூலமாக நாம் தீமை தரும் விஷயங்களை ஒதுக்கப் கற்றுக் கொள்வோம். இதன் விளைவாக சரியான பாதையில் நாம் செல்ல முடியும். நம் வாழ்க்கை உயர சரியான பாதையில் செல்வதுதான் சிறந்தது.