இந்த உலகில் சிறந்த படிப்பு படிக்க, உயர்ந்த சம்பளத்தில் வேலையில் அமர, உல்லாச வாழ்க்கைக்கு செல்வம் திரட்ட, பாதுகாப்பான வாழ்வுக்கு பக்கபலம் சேர்க்க, தற்கால மனிதர்கள் அனைவரும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகையால் இந்த போட்டியில் பங்கு கொண்டிருக்கும் எந்த மனிதனிடமும் நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள்.
மற்றவர்கள் உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு அவர்கள் நன்றியுணர்ச்சியுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.
நம்மைப் பற்றி தவறான விமர்சனங்களுக்கு நாம் சிறிது கூட மதிப்பு தரக்கூடாது. மற்றவர்களின் நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில பேர் தங்களை பற்றி எவனாவது ஏதாவது தவறாக சொன்னான் என்று கேள்விப்பட்டால்" அப்படியா விஷயம்? அவன் 'ஐயோ, அப்பா, ஆளை விடு சாமி!' என்று என் காலில் விழுந்து கதறும்படி பண்ணுகிறேன் பார்!" என்று சவால் விட்டுவிட்டு அவனுக்கு எங்கே எப்படி யார் மூலம் கெடுதல் பண்ணலாம், தொல்லை கொடு நிம்மதியை கெடுக்கலாம் என்று மூளையை கசக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதனால் இவர்கள் வாழ்நாள் தான் தேவையற்ற பயனற்ற வழியில் கழியுமே தவிர, வேறு ஒரு பயனும் இல்லை. இப்படி தங்களைப் பற்றி தவறான விமர்சனம் செய்த ஒவ்வொருவனையும் பழி வாங்குவதே வேலையாக இருந்தால் அப்புறம் நம் சொந்த வாழ்க்கையை எப்பொழுதுதான் வாழத் தொடங்குவது? யோசிக்க வேண்டாமா?
வெற்றி நோக்குடன் செயல்படுபவர்கள் முதலில் தங்களைப் பற்றிய நல்ல அல்லது கெட்ட எந்த விதமான விமர்சனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் மனம் எல்லாம் அவர்கள் செல்ல வேண்டிய வாழ்க்கை பயணத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதிலேயே குவிந்திருக்கும்.
'மற்றவர்கள் மேம்போக்காக என்னைப் பற்றி கூறும் எந்த அவதூறுச் செய்திகளுக்கும் என்னை துன்புறுத்தும் சக்தி கிடையாது' என்றார் ஓர் அறிஞர் எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை.