வீடோ, நாடோ அனைத்திலும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும் நாடும் சீரழிந்துவிடும்.
இதனை, ‘‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’’ என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஒன்று பட்டுச் செயல்பட்டால் அனைவரும் வாழலாம். இல்லை எனில் அனைவருக்கும் அழிவு என்பது உறுதி.
கிராமத்தில் ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நால்வரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அதனைக் கண்டு அவர் மிகவும் வருத்தமாக இருந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று அவர் எவ்வளவு அறிவுரை சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்குப் பாடம் புகட்ட, புத்தி சொல்ல ஒரு போட்டியை நடத்தினார். அவர் நால்வரையும் ஆளுக்கொரு கம்புகளை எடுத்து வரச் சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். மூத்த மகனை அழைத்து நான்கு கம்புகளையும் ஒன்றாகக் கட்டச் சொன்னார்.
பிறகு ஒவ்வொருவரையும் அழைத்து அந்தக் கட்டியக் கம்புகளை உடைக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை.
பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாகக் கொடுத்து உடைக்கச் சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.
அந்த பெரியவர், ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறன். நீங்கள் நாலு பேரும் நான்கு கம்புகளைப் போலத்தான். நீங்க ஒற்றுமையாக இருந்தால் யாரும் உங்களை அசைக்க முடியாது. இனி, எப்போதும் அனைவரும் ஒற்றுமையா இருக்கணும் என்று கூறினார்.
எவ்வளவு சின்னப் பொருளானாலும், அவை ஒன்று சேரும்போதுதான் பலம் பெறும். எந்த செயலையும் முடிப்பது எளிது. அதைப் போலவே பல பேருடைய மனம் ஒன்றுபட்டால், செய்ய முடியாதது எதுவுமில்லை.