
பலவீனமான மனமோ, வலிமை உள்ளதோ, நாம் செய்யும் முயற்சிதான் மனதை நம் வழிக்குக் கொண்டு வருகிறது. முயற்சி முழுமனதுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் மனதின் சக்தியை நாம் உணர முடியும். நம் மனதை ஒருமுகப்படுத்தினால் உடனே அது ஒரு புது உலகத்தில் காலடி எடுத்து வைப்பதாக எண்ணத் தொடங்கும். இந்த நிலையை உணர்ந்து மனதை அதே வழியில் செல்லவிட்டு நல்ல காரியங்களில் ஈடுபடச் செய்யவேண்டும்.
“உன்னையே நீ உணர்ந்துகொள் என்று சித்தர்கள் கூறியது, விளையாட்டுக்காகவோ, புரியாத புதிராகவோ அவர்கள் இவ்விதம் கூறவில்லை. உன்னை என்றால் உள்ளே இருக்கும் மகா சக்தியைதான் அவர்கள் குறிப்பிட்டார்கள். உள்ளே அடங்கியிருக்கும் மகா சக்தியை உணர்ந்தால் பிறகு எதற்கும் கவலைப்படத் தேவை இல்லை. உள்ளத்தினுள்ளே இருக்கும் மகா சக்தியை உணர்ந்தவன் உலகத்தையே மறந்து விடுவான், தன்னை மறப்பான், சுற்றுச்சூழலை மறந்து விடுவான். அவன் மனதில் எந்த குறிகோள் தோன்றியதோ அதை அடையவே முயற்சிப்பார்கள். தன்னுள் இருக்கும் மகா சக்தியை உணர்ந்தவனால் செய்ய முடியாதவை இருக்காது. மகாசக்தியை நல்ல விதமாக பயன்படுத்தினால் பலருக்கும் நன்மை உண்டாகச் செய்யலாம்.
உடல், உள்ளம் இரண்டையும் ஒரு முகப்படுத்தினால், இரண்டு சக்திகளையும் ஒருமுகப்படுத்தலாம். உடலின் சக்தியை ஒரு முகப்படுத்துவது என்பது உடலின் ஒவ்வொரு உறுப்பின் சக்தியையும் ஒன்று திரட்டி ஒரு பணியில் ஈடுபடுவதாகும். உடலின் சக்தியை ஒருமுகப்படுத்துவது சுலபமானதல்ல. அதை ஒருமுகப்படுத்திவிட்டால் உள்ளத்திற்கு அளவற்ற சக்தி ஏற்படும்.
மனதின் சக்தியை நாம் ஒன்று திரட்டும்போது மிகவும் கடினமான அனுபவம் உண்டாகும். ஏமாற்றம், வருந்தத்தக்க அனுபவம், பலவித தொல்லைகள் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்துக் கொள்ளும். நாம் இவற்றில் இருந்து தப்பிக்கவே முயற்சிப்போம். இதனால் விரும்பிய பலன் கிடைக்காமல் போகலாம். நமது மனம் துன்ப நிலையை அடையலாம். சிந்திக்கும் திறனையும் இழந்து விடலாம். மன அமைதிக்காக விருப்பத்தை தியாகம் செய்ய வேண்டியிருக்கலாம்.
சாதாரண விவகாரங்களுக்காக மனதின் மகாசக்தியை வீணடிக்க கூடாது. காரிய சாத்தியமான, பலருக்கு பயன் தரக்கூடிய சிறப்பான எண்ணங்களுக்காக மனதின் மகாசக்தியைப் பயன்படுத்த வேண்டும். வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
நம்முடைய எல்லா விருப்பங்களும் ஒரே சமயத்தில் நிறைவேற நினைக்கக்கூடாது. நம்முடைய நிலை, பதவி ஆகியவற்றால் சிந்திக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்த காலதாமதம் ஆகலாம், அல்லது விரைவாகவும் நடைபெறலாம். எல்லாமே நம்முடைய முயற்சியின் தன்மையை பொறுத்திருக்கிறது. அலட்சியமாக நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் கவனமின்றி முயற்சியில் ஈடுபட்டால் தோல்வியையே தழுவுவீர்கள்.
மனதை ஒருமுகப்படுத்துவது ஸ்ருதிப் பெட்டியில் ஸ்ருதி சேர்ப்பது போன்றதாகும். இசைக் கருவிகளின் மூலம் வாழ்க்கை நடத்துபவர் அதை அலட்சியம் செய்யக்கூடாது. அவன் இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டாலும் இசைக்கருவிகளை பாதுகாக்க வேண்டும். எப்போது நம் சக்தி முழுவதையும் உபயோகிக்க வேண்டும் என்பது நமக்கு தெரிவதில்லை. அதனாலேயே நமது மனதை அலைபாய விடுகின்றோம், நாமும் அவதிப்படுகிறோம்.
நின்று நிதானமாக சிந்தியுங்கள் எத்தனை முறை தோல்வியை தழுவினாலும் ஒரே குறிக்கோளில் மனதை ஒருமுகப்படுத்தினால் உள்ளத்தாமரை மலரும், உள்ளொளி தோன்றும், பாவமோ, துன்பமோ, துயரமோ இல்லாத ஒரு இன்பமான நிலையை அடையலாம். நீங்கள் எவ்விதமாக நினைக்கிறீர்களோ அப்படியே ஆவீர்கள், உங்கள் எண்ணப்படியே அனைத்தும் நடைபெறும்.