"நம் மனக்கண்களை திறந்தால், அளவிலா செல்வ வளத்தைப் பார்த்தால் முடிவிலா வளம் நம்மைச் சுற்றியிருப்பதை அறியலாம். நாம் வளமாக, பெருமையாக, மகிழ்ச்சியாக, அபரிமிதமாக வாழத் தேவையானதை நம்மிடமே உள்ள தங்கச் சுரங்கத்திலிருந்து நாம் எடுத்துக் கொள்ளலாம்." -Joseph Murphy.
அமெரிக்காவில் மீள்குடியேறிய அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ஜோசப் மர்பி, Ph. D., D.D., (1898-1981) ஒரு சிறந்த மற்றும் பரவலாகப் போற்றப்படும் புதிய சிந்தனை அமைச்சராகவும் எழுத்தாளராகவும் இருந்தார், அவருடைய ஊக்கமளிக்கும் கிளாசிக் தி பவர் ஆஃப் யுவர் சப்கான்ஷியஸ் மைண்டிற்காக மிகவும் பிரபலமானவர்.
இறைவன் நமக்குத் தந்த உறுப்புகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மனம். ஏன் தெரியுமா? நம் உடலின் உறுப்புகளை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நம்மால் முடியும். ஆனால் நம்மையே அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரு சூட்சுமமான, எளிதில் புரிந்து கொள்ள முடியாத உறுப்புதான் மனம்.
மனித இனம் படைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஞானிகளும் துறவிகளும் அரசர்களும் நாட்டை துறந்து காட்டில் வசித்து உடலை வருந்த பல தவங்களை மேற்கொண்டு மனதை அடக்கும் சூட்சுமங்களை கற்றனர். ஆயினும் முழுமையாக அறிந்தனரா என்றால் இல்லை என்பதுதான் பதில்.
மனம் மிகவும் அற்புதமான ஒன்று. இதில் என்ன இருக்கிறது? எதை நினைக்கிறது? எப்படிச் செயல்படுகிறது? என்பதை யாராலும் கூற முடியாது. மனம் புதிர் போன்றது. ஆம்..இன்னும் மனம் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகிறது.
இவ்வளவு அற்புதமான நமது மனம் எனும் தங்கச் சுரங்கத்தை நம்மிடம் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் வெளியே தேடி அலைகிறோம். உங்கள் மனதை ஆள முடிந்தால் உங்களால் இந்த உலகைக் கூட ஆள முடியும். இந்த உலகில் தோன்றிய எந்த ஒரு கண்டுபிடிப்பும் யாரோ ஒருவரின் மனதில் தோன்றிய எண்ணங்களின் விளைவே ஆகும்.
உங்களுக்கு வேண்டியதைத் தர உங்களுக்குள் இருக்கும் தங்கச் சுரங்கம் காத்திருக்கிறது. வெற்றி வேண்டுமா? சலிக்காமல் அலுக்காமல் கேளுங்கள். அதை நோக்கி செலுத்தப்படுவீர்கள் மனம் எனும் மாயத்தால்.
செயலில் தடையா? சிந்தியுங்கள். பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அதைப்பற்றி சிந்தனை செய்தல் வேண்டும். மனதிற்குள் அதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் ஏதேனும் தீர்வை நிச்சயம் தங்கச் சுரங்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும்.
தறிகெட்டு ஓடும் குதிரையை கடிவாளம் கொண்டு கட்டுப்படுத்துகிறோம். அதேபோல மனம் போல போக்கெல்லாம் போகாமல் மனதையும் நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சாத்தியமற்றது என்று எதுவுமில்லை.
மனது எனும் தங்கச் சுரங்கம் பற்றி ஆன்றோர்களும் தத்துவஞானிகளும் பல பொன்மொழிகளை நமக்குக் தந்துள்ளனர். அதில் ஒன்று இது.
"உறுதியான மனத்தினால் எதையும் அடைய முடியும்!"
-இராமகிருஷ்ணர். ஆம் எதை இழந்தாலும் மனதின் உறுதியை மட்டும் இழந்து விடாதீர்கள்.
இனியும் தாமதிக்காமல் தன் பலம் அறியாமல் காலில் கட்டிய சங்கிலியை இழுத்து செல்லும் யானையைப்போல் வாழாமல் நமக்குள் இருக்கும் தங்கச்சுரங்கத்தை பயன்படுத்தி நம்மைச் சூழ்ந்திருக்கும் வளங்களைக் கண்டறிந்து வெற்றி பெறுவோம்.